எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்க கியூ ஆர் முறை அவசியம் – ஜெகதீஸ்வரன்

தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேமித்து வைப்பதையும், தற்காலிகத் தட்டுப்பாடுகள் உருவாவதை தடுக்கவும் கியூ ஆர் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியாவில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் திங்கட்கிழமை (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் பாரிய நெருக்கடியைச் சந்தித்துள்ளது.

இதன் தாக்கத்தினால் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல நாடுகளில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிகிறது. அபிவிருத்தி அடைந்த நாடுகள் கூட இந்த நெருக்கடிக்கு முகம் கொடுக்க முடியாமல் தவிர்த்துக் கொண்டுள்ளார்கள்.

இலங்கையில் நிலைமையைக் கட்டுப்படுத்த அரசு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.  எரிபொருள் நிலையங்களில் நிலவும் நீண்ட வரிசைகளைத் தவிர்க்கும் பொருட்டு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கோட்டா +கியூ ஆர்)  முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நடைமுறையின் மூலம் எரிபொருள் விநியோகம் தற்போது சீரான முறையில் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேமித்து வைப்பதையும், தற்காலிகத் தட்டுப்பாடுகள் உருவாவதை தடுக்கவும் இந்த முறை பெரிதும் உதவுகிறது.

கியூ ஆர் முறைமையில் பதிவு செய்யும் போது பொதுமக்கள் சில நடைமுறைச் சிக்கல்களை எதிர்நோக்குவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

புதிதாகப் பதிவு செய்பவர்களுக்கு இது இலகுவாக இருந்தாலும், வாகனங்களின் இரண்டாம் அல்லது மூன்றாம் உரிமையாளர்கள் பழைய பதிவுகளை நீக்கிவிட்டுப் புதிதாகப் பதிவு செய்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இந்தத் தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரி செய்ய டிஜிட்டல் அமைச்சகம் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. அடுத்த ஓரிரு நாட்களில் இந்தச் சிக்கல்கள் முழுமையாகத் தீர்க்கப்பட்டு, அனைவரும் தடையின்றிப் பதிவு செய்ய வழிவகை செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

சாதாரணமாக இலங்கைக்கு ஒரு நாளைக்கு 6,000 மெற்றிக் தொன் எரிபொருள் தேவைப்படுகிறது. இருப்பினும், கடந்த சில வாரங்களில் நிலவிய அச்சம் காரணமாக மக்கள் அதிகளவில் எரிபொருளைக் கொள்வனவு செய்ததால், தினசரி நுகர்வு 10,000 மெட்ரிக் டன் ஆக உயர்ந்துள்ளது.

தற்போதுள்ள கையிருப்பை வைத்து எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை விநியோகத்தைத் தொடர முடியும் என அரசு கணித்துள்ளது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளிடமிருந்து எரிபொருளைக் கொள்வனவு செய்யத் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி செயலாளருடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு  கிபூஆர் நடைமுறை இன்றி எரிபொருள் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மீனவர்களுக்கும் தடையின்றி எரிபொருள் கிடைக்க விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த உலகளாவிய நெருக்கடியை எதிர்க்கட்சிகள் அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். எனினும், இது ஒரு சர்வதேசப் பிரச்சினை என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளார்கள். ஆனால் போலிப் பிரச்சாரம் மூலம் எதிர்கட்சிகள் அரசியல் இலாபம் தேட முயல்கிறார்கள். மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றார்.