ஏப்ரல் இறுதி வரையான எரிபொருள் இருப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!

ஏப்ரல் மாதத்துக்கான எரிபொருள் முற்பதிவுகள் அனைத்தும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய 5 கப்பல்கள் தமது வருகையை உறுதிப்படுத்தியுள்ளன. எனவே ஏப்ரல் இறுதி வரையான எரிபொருள் இருப்பு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூரா நெத்திகுமார தெரிவித்தார்.

கொழும்பில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கியூ.ஆர். குறியீட்டைப் பெற்றுக் கொள்வதில் காணப்பட்ட தொழிநுட்ப சிக்கல்கள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய தற்போது 55 000க்கும் மேற்பட்ட புதிய பயனாளர்கள் கியூ.ஆர். குறியீட்டைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இன்னும் சிக்கல்களை எதிர்கொள்பவர்கள் 1919 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

கியூ.ஆர். குறியீட்டுடன், வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்கம் ஒற்றை எண்ணா இரட்டை எண்ணா என்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்ட பின்னரே இனி எரிபொருள் விநியோகிக்கப்படும். பெரும்பாலான இடங்களில் எரிபொருளுக்கான வரிசைகள் குறைவடைந்துள்ளன. விநியோகத்தர்கள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து எரிபொருளைப் பெற்றுக் கொள்வதில் எவ்வித தடையும் இல்லை.

அத்தோடு ஏப்ரல் மாதத்துக்கான முற்பதிவுகள் அனைத்தும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய 5 கப்பல்கள் தமது வருகையை உறுதிப்படுத்தியுள்ளன. எனவே ஏப்ரல் இறுதி வரையான எரிபொருள் இருப்பு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

விவசாயம் மற்றும் மீன்பிடித்துறை என்பவற்றில் ஈடுபடுபவர்களுக்கு எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கு தேவையான விண்ணப்ப படிவமொன்று வழங்கப்பட்டுள்ளது. குறித்த விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யப்பட்டு, உரிய அதிகாரியால் உறுதிப்படுத்தப்பட்டால் எவ்வித இடையூறுகளும் இன்றி எரிபொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.