இலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கோறளைப்பற்று வடக்கு பிரதேச கிளையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இன்றைய தினம் (18) கதிரவெளியில் நடைபெற்றது.
கடந்த யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய மக்கள் உப்பு கூட இல்லாமல் தங்களிடமிருந்த அரிசியைக் கொண்டு கஞ்சி காய்ச்சி, அவர்களது பசியைப் போக்கியிருந்தனர்.
இந்நிலையில் அப்போதைய சூழ்நிலையில் அங்கிருந்த மக்கள் கஞ்சி காய்ச்சி அருந்தியதை நினைவுகூர்ந்து வருடந்தோறும் இக்காலப்பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்கும் நிகழ்வுகள் வடகிழக்கில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மட்டக்களப்பில் இன்றைய நிகழ்வில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி, சிரட்டைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
இதன்போது அங்கிருந்த மக்கள் விருப்புடன் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி உட்கொண்டனர்.
இந்த நினைவேந்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன், பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத், கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதேச சபை தவிசாளர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.




