கத்தார் அமீருடன் ஜனாதிபதி அநுர தொலைபேசியில் உரையாடல்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி ஆகியோருக்கு இடையே புதன்கிழமை (18) விசேட தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழல் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

கத்தார் மற்றும் பிராந்தியத்தின் ஏனைய நாடுகள் மீது முன்னெடுக்கப்படும் ஈரானின் தாக்குதல்கள் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஜனாதிபதி அநுர கவலை வெளியிட்டுள்ளார். இக்கட்டான இந்தச் சூழலில் இலங்கையானது கத்தாருடன் உறுதியான ஒற்றுமையுடனும் ஆதரவுடனும் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

கட்டாரில் வசிக்கும் இலட்சக்கணக்கான இலங்கைத் தொழிலாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் அமீர் தெரிவிக்கையில்,

கத்தாரில் வாழும் இலங்கையர்கள் உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டவர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தனது அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் இருப்பதாக அமீர் உறுதியளித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்திய அவர், இலங்கையர்கள் எவ்வித அச்சமும் இன்றி இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் உலகளாவிய எரிசக்தி சந்தை மற்றும் விநியோகச் சங்கிலிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் இரு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.

சவால்கள் நிலவியபோதிலும், உலகிற்கு எரிபொருளை விநியோகிப்பதில் கத்தார் ஒரு ‘நம்பகமான எரிசக்தி பங்குதாரராக’ தொடர்ந்து செயற்படும் என அமீர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

போரை உடனடியாக நிறுத்தி, இராஜதந்திர ரீதியில் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குச் சர்வதேச நாடுகள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்