கொஹுவலை, சரணங்கர வீதி, போதியவத்தை பகுதியில் செவ்வாய்க்கிழமை (30) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கொஹுவலை, சரணங்கர வீதி, போதியவத்தை பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் காயமடைந்து களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கு வைக்கப்பட்டவர் சிறுமி அல்ல சிறுமியின் தாய் என தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிறுமியின் தாய், நுகேகொடை பிரதேசத்தில் கடந்த 22 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “டுபாய் அவிஷ்க” என்பவரின் சகாவை சுட்டுக் கொலை செய்ய உளவு பார்த்து உதவியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுமியின் தாய் “டுபாய் அவிஷ்க”வுக்கு சொந்தாமான போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டு அவர் தொடர்பான தகவல்களை பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “படோவிட்ட அசங்க” என்பவருக்கு வழங்கியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கொஹுவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





