கிழக்கு மாகாணத்தில் ஒரு இலட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் அரசின் ஏழு வகையான பொறிமுறையின் ஊடாக அபகரிக்கப்பட்டு சுவீகரிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண நில மீட்பிற்கான வலையமைப்பினர் தெரிவிக்கின்றனர்.
2026ஆம் ஆண்டிற்கான காணி வாரத்தினை முன்னிட்டு திருகோணமலை விடுதி ஒன்றில் இன்றையதினம் திங்கட்கிழமை (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே கிழக்கு மாகாண நில மீட்பிற்கான திருகோணமலை மாவட்ட செயற்பாட்டாளர்கள் இதனை தெரிவித்தனர்.
யுத்தம் நிறைவுக்கு வந்த சூழ்நிலையிலும் இன்று வரை குறிப்பிட்டளவு மக்கள் தங்களது நிலங்களுக்கான முறையான காணி ஆவணங்களைப் பெற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருப்பதுடன் அரசு வேற்று இனத்தினர் மற்றும் முதலாளிகளால் திட்டமிட்ட வகையில் மக்களின் குடியிருப்பு மற்றும் ஜீவனோபாயத்திற்குரிய தொழில் இடங்கள் மற்றும் மத கலாச்சார இடங்கள் சட்ட ரீதியாகவும் சட்ட முறையற்றும் அபகரிக்கப்படுவதுடன் சுபீகரிக்கப்பட்டும் வருகின்றது.
குறிப்பாக எமது கிழக்கு மாகாணத்தில் சுமாராக ஒரு லட்சத்து இருபதாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் அரசின் 07 வகையான பொறிமுறைகள் ஊடாக அபகரிக்கப்பட்டும் சுபீகரிக்கப்பட்டும் வருகிறது. குறிப்பாக தொல்லியல் இடம் எனவும் பாதுகாப்பு பகுதி எனவும் வன வளப்பகுதி என்றும் பூஜா பூமி இடம் எனவும் வன விலங்கு பகுதி எனவும் அபிவிருத்தி இடம் எனவும் சுற்றுலா பிரதேசம் எனவும் அடையாளப்படுத்தி பல தேவைகளுக்கு பயன்படுத்தி வருதாகவும் குறிப்பிட்டனர்.
அந்தவகையில் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 1958 சிங்கள குடும்பங்கள் வாழ்கின்ற நிலையில் அங்கு 32 விகாரைகளும் அதனுடன் இணைந்த இடங்களுமாக பிரகடனப்படுத்தப்பட்டு தமிழ் முஸ்லீம் மக்களுடைய பூர்வீக இடங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழர்கள் பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வந்த வழிபாட்டு இடங்கள் அபகரிக்கப்பட்டு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டுள்ளதோடு எங்களுடைய ஆலயங்களை வழிபடுவதற்கு அங்கு இருக்கின்ற பௌத்த மதகுருமாரின் அனுமதியைப் பெறவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருப்பதாகவும் திரியாய் பகுதியைச் சேர்ந்த செயற்பாட்டாளர் டனுசன் குறிப்பிட்டார்.
அதேபோன்று முத்துநகர் பகுதி விவசாயிகள் 53 வருடங்களுக்கு மேலாக விவசாயம் மேற்கொண்டு வந்த 1200 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் சோலார் மின் திட்டத்திற்திற்காக வழங்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தமது வாழ்வாதாரத்தையும், ஜீவனோபாயத்தையும் இழந்துள்ளனர்.
இதனால் 352 விவசாயிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாவும் இதற்கான நீதியைக் கோரி 70 நாட்களுக்கு மேலாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போதும் இதுவரை எவ்வித தீர்வும் ஆரசால் வழங்கப்படவில்லை எனவும் முத்துநகர் பகுதியைச் சேர்ந்த சகிலா சபருல்லா என்ற செயற்பாட்டாரள் தெரிவித்தார்.




