கிழக்கு மாகாணத்தில் அரசியலில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க புதிய செயற்றிட்டம்!

Search for Common Ground – SFCG  அமைப்பானது  UNDP  நிறுவனத்தின் நிதியுதவியுடன் கிழக்கு மாகாணத்தில்  அரசியலில் பெண்களின் வகிபாகத்தினை அதிகரித்தல், பெண்கள் தொடர்பில் இயங்குகின்ற சிவில் சமூக அமைப்புக்கிடையில் வலையமைப்பினை உருவாக்குதல் போன்ற விடயங்களை முன்னெடுப்பது தொடர்பில் பல செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இத்திட்டத்தின்  பகுதியாக  திங்கட்கிழமை (12) அரசியலில் பங்கேற்கும் பெண்களுக்கான செயலமர்வும் , மற்றும் செவ்வாய்க்கிழமை (13) சிவில், சமூக பிரதிநிதிகளுக்குமான செயலமர்வும் திருகோணமலையில் இடம்பெற்றுள்ளன.

இவ் நிகழ்வுகளில் பங்கேற்ற பிரதிநிதிகள் தமக்கு அரசியலிலும், சமூகத்திலும் காணப்படுகின்ற சவால்களையும் அவற்றினை எதிர்கொள்வதில் உள்ள சிரமமான அனுபவங்களினையும் பகிர்ந்துகொண்டனர்.

அரசியலில் பெண்களின் பங்களிப்பினையும் பாதுகாப்பினையும் உறுதிசெய்யும்  பரிந்துரைகள் முன்வைக்கப்படல்,  அரசியல் கொள்கைகள், பரந்துரைகள் மற்றும் சட்டவரைபுகள் குறித்த விழிப்புணர்வு, தெளிவூட்டல்கள் வழங்கப்படுவதற்கான நிகழ்வுகள் ஓழுங்கமைப்பு செய்யப்படல்,  பெண்களுக்கெதிரான வன்முறைகள் இடம்பெறும் போது அவர்கள் அதனை வெளிக்கொணர்வதற்கான பாதுகாப்பான சூழல் உருவாக்கப்படல் போன்ற முக்கிய விடயங்கள் மற்றும் பொருளாதார விருத்தியினை மேம்படுத்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும் இவற்றினை எதிர்காலத்தில் நிவர்த்திப்பதற்கான சில விடயங்களையும் முன்வைத்தனர்.