புதிய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தாம் இனவாதி இல்லை என்றும், மதவாதி இல்லை என்றும் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் செய்யும் சகல நடவடிக்கைகளும் தமிழ்மக்களுக்கும் ஏனைய மதத்தவர்களுக்கும் விரோதமானவையாகவே இருக்கின்றன. எனவே தமிழர்களுக்குத் தீங்காக அமையக்கூடிய கிவுல் ஓயா திட்டத்தை முழுமையாக முடிவுக்குக்கொண்டுவரவேண்டிய பொறுப்பு ஒட்டுமொத்த தமிழ்மக்களுக்கும் உண்டு என்பதை சகலரும் மனதிலிருத்திச் செயற்படவேண்டும் என ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் வலியுறுத்தினார்.
கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக திங்கட்கிழமை (02) நெடுங்கேணியில் நடைபெற்ற மாபெரும் எதிர்ப்புப்போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் சிங்களக்குடியேற்றங்கள் மிகத்துரிதமாக நிறுவப்பட்டு வந்திருக்கின்றன. இந்த சிங்களக்குடியேற்றங்கள் விவசாய அபிவிருத்தி, நீர்ப்பாசனம் எனும் பெயர்களில் இந்தக் குடியேற்றங்களை நிறுவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
குறிப்பாக கிழக்கில் அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் சிங்களக்குடியேற்றங்கள் நிறைந்த பகுதிகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. இப்போது மகாவலி எனும் பெயரில் மட்டக்களப்பிலும் இவ்வாறான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
முல்லைத்தீவு, வவுனியா போன்ற மாவட்டங்களில், அதாவது வடமாகாணத்தில் 25 வீதமான சிங்கள மக்களைக் குடியேற்றவேண்டும் என்ற கொள்கை யுத்தத்தின் பின்னர் ஆட்சிபீடமேறிய அரசாங்கங்களிடம் இருக்கிறது.
அதன்மூலம் மாத்திரமே பிற்காலத்தில் தமிழ்மக்கள் தமிழீழ கோரிக்கையை முன்வைக்கமாட்டார்கள் என்ற எண்ணம் அவ்வரசாங்கங்களிடம் மேலோங்கியுள்ளது.
மகாவலி எல் வலயத்தில் சிங்களவர்கள், அதிலும் சிறைச்சாலைகளில் இருந்தவர்கள் கொண்டுவந்து குடியேற்றப்பட்டார்கள். இன்று அவர்களுக்கு தண்ணீர் தேவை என்பதற்காக மிச்சம் சொச்சமாக இருக்கும் தமிழ்மக்களின் நிலங்களைக் கபளீகரம் செய்து, சுமார் பத்தாயிரம் ஏக்கர் காடுகளை அழித்து, அங்குள்ள சிறு குளங்களை அழித்து, தமிழ்மக்களை அந்த மண்ணிலிருந்து விரட்டி, அங்கு ஒரு புதிய நீர்ப்பாசனத்திட்டத்தைக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் யோசிக்கிறது.
இந்தக் குடியேற்றங்கள் இதனுடன் முடிந்துபோகாது. நெடுங்கேணி, மாங்குளம், வவுனிக்குளம் என சகல இடங்களிலும் இந்த மகாவலி திட்டத்தின் சிறகுகள் பரந்து விரிந்திருக்கிறது.
எனவே அந்தக் குடியேற்றங்கள் வவுனியாவை சுற்றிவளைத்து இடம்பெறும் அதேவேளை, திருகோணமலையில் ஒரு சிங்களத்தொகுதி வந்ததைப்போன்று, வவுனியா மற்றும் முல்லைத்தீவை இணைந்து ஒரு சிங்களத்தொகுதி உருவாக்கப்படும்.
இப்புதிய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தாம் இனவாதி இல்லை என்றும், மதவாதி இல்லை என்றும் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் செய்யும் சகல நடவடிக்கைகளும் தமிழ்மக்களுக்கும் ஏனைய மதத்தவர்களுக்கும் விரோதமானவையாகவே இருக்கின்றன. எனவே இதனைக் கட்டுப்படுத்தி, முடிவுக்குக்கொண்டுவரவேண்டிய பொறுப்பு ஒட்டுமொத்த தமிழ்மக்களுக்கும் உண்டு என்றார்.




