முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் கேப்பாப்புலவு காணி விடுவிப்பு தொடர்பில், கூடிய விரைவில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, குறித்த கலந்துரையாடலின் பின்னர் கேப்பாப்புலவு காணி விடுவிப்பு தொடர்பான முடிவு தம்மால் அறிவிக்கப்படும் எனவும் பதிலளித்துள்ளார்.
பாராளுமன்ற குழு அறையில் நேற்று செவ்வாய்க்கிழமை (7) நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
கேப்பாப்புலவு காணி விடுவிப்பு விடயம் தொடர்பில் குறித்த பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் ரவிகரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி, பிரதிப் பாதுகாப்பு அமைச்சர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், முப்படை அதிகாரிகள், அபாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில் கடந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் முன்னேற்ற நிலைமைகள் குறித்து ஆராயும்போது கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்பு விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
குறித்த கேப்பாப்புலவு காணி விடுவிப்பு விடயத்தில், கடந்த கூட்டத்தில் இராணுவத்தினரிடமிருந்து ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சருமான அனுர குமார திசாநாயக்கவால் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டிருந்தது. எனினும் இராணுவத்தினரிடமிருந்து முழுமையான அறிக்கை இதுவரை கிடைக்கப் பெறவில்லை என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் இராணுவத்துக்கு அந்தக் காணிகள் தேவை என காணி உரிமையாளர்களிடம் இராணுவத்தால் ஏற்கனவே கோரப்பட்டதா எனவும் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த காணி விடயத்தில், காணி உரிமையாளர்கள் சீரான அறிவித்தல்கள் எதனையும் தமக்குத் தரவில்லை எனவும், அது தொடர்பாக தாம் விரிவான அறிக்கையொன்றினைச் சமர்ப்பிப்பதாக இராணுவத்தினரால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை இவ்விடயத்தில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளுக்கு மாற்றீடாக 44 காணி உரிமையாளர்களுக்கு மாற்றுக்காணிகள் வழங்கப்பட்டிருந்தாலும், 11 பேருக்கு மாற்றுக்காணிகள் வழங்கப்படவில்லை என ஜனாதிபதியால் சுட்டிக்காட்டப்பட்டது.
எனவே இந்த விடயத்தில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் 11 பேருக்கான மாற்றுக்காணி வழங்கும் விடயத்தில் கவனம் செலுத்தியிருக்கலாம் எனவும் ஜனதிபதியால் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இதன்போது கேப்பாப்புலவு மக்களின் பூர்விகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி நான் எனது கருத்துக்களை முன்வைத்திருந்தேன்.
குறிப்பாக 1818ஆம் ஆண்டிலிருந்து கேப்பாப்புலவில் மக்கள் குடியிருப்பதாக வரலாறுகள் இருக்கின்றது என்ற விடயத்தினை இதன்போது சுட்டிக்காட்டினேன்.
அந்த வகையில் மக்களின் வாழ்வாதார மூலங்களுடன் கூடிய பூர்வீக குடியிருப்புக் காணிகளே இவ்வாறு இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் தெளிவுபடுத்தினேன்.
அத்தோடு முன்னைய காலங்களில் கேப்பாப்புலவுப் பகுதியில் இராணுவ முகாம்கள் எவையும் இருந்திருக்கவில்லை என்பதையும் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தேன்.
இந்நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு மக்கள் தமது பூர்வீக வாழ்விடத்திலிருந்து இடம்பெயர்ந்திருந்தனர். இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்வதற்கு வந்தபோது அவர்களின் காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருப்பதை அந்த காணிகளுக்குரிய மக்களால் அவதானிக்க முடிந்துள்ளது.
இத்தகைய சூழலில் அயற்கிராமமான சீனியாமோட்டை என்னும் கிராமத்தில் இந்த மக்கள் குடியேற்றப்பட்டனர். குறிப்பாக ஒரு குடும்பத்திற்கு 0.25 ஏக்கர் காணிகள் வழங்கப்பட்டு அந்த மக்கள் குடியேற்றம் செய்யப்பட்டனர். இவ்வாறு மக்கள் தமது கேப்பாப்புலவு பூர்வீகக் கிராமத்தில் மீள்குடியமர்த்தப்படாமல் அயற்கிராமத்தில் குடியேற்றப்படுவதற்கு அப்போது மிகக் கடுமையான எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில், இது ஒரு தற்காலிக ஏற்பாடு எனவும், இராணுவம் மக்களின் காணிகளில் இருந்து வெளியேறிய பிற்பாடு, மக்கள் அவர்களது சொந்தக் காணிகளில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் என்பவற்றினால் மக்களுக்கு உறுதிமொழி வழங்கப்பட்ட விடயம் தொடர்பிலும் இதன்போது தெளிவுபடுத்தினேன்.
அவ்வாறு தெரிவிக்கப்பட்டபோதும் கேப்பாப்புலவில் பகுதியளவான காணிகளே விடுவிக்கப்பட்டு மக்கள் குடியேற்றப்பட்டனர்.
அந்த வகையில் இன்னும் 55 பேருக்குரிய 59.9 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவேண்டியுள்ளது. குறித்த விடயத்தை முல்லைத்தீவு மாவட்ட செயலாளரும் உறுதிப்படுத்தியுள்ளார் என்பதையும் சுட்டிக்காட்டினேன்.
அத்தோடு நான் ஏற்கனவே குறித்த கேப்பாப்புலவு காணி விடுவிப்பு தொடர்பில் முல்லைத்தீவு மவட்ட செயலகத்தில் இருந்து பெறப்பட்ட உத்தியோகபூர்வ தரவுகளுடன் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியதற்கு அமைவாக, ஜனாதிபதி செயலகம் இராணுவத் தரப்பினருக்கு கடிதம் அனுப்பியுள்ளதுடன், அந்தக் கடிதம் எனக்கும் பிரதியிடப்பட்டிருப்பதையும் இதன்போது நினைவு படுத்தியிருந்தேன்.
அத்தோடு கேப்பாப்புலவில் விடுவிக்கப்படவேண்டிய காணிகள் தொடர்பான விபரங்கள் மற்றும் ஏற்கனவே அனுப்பப்பட்ட கடிதங்களின் பிரதிகள் என்பவற்றை ஜனாதிபதியிடம் இதன்போது நேரடியாகக் கையளித்துமிருந்தேன்.
அத்தோடு மக்களுடைய இந்த காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியிருந்தேன்.
குறிப்பாக இராணுவத்தினர் வெளியேறிய பிற்பாடு சொந்தக்காணிகளில் குடியேற்றப்படுவீர்கள் என்ற உத்தரவாதத்துடன் ஒரு குடும்பத்திற்கு 0.25 ஏக்கர் காணி வீதம் 44 குடும்பங்களுக்கு மாற்றுக்காணிகள் வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு 11 பேருக்கு மாற்றுக்காணிகள் எவையும் வழங்கப்படவில்லை. எனினும் இராணுவம் அபகரித்து வைத்துள்ள பகுதியில் மக்கள் ஒவ்வொருவருக்கும் 01 ஏக்கருக்கும் மேலான பூர்வீக காணிகள் இருப்பதையும் இதன்போது சுட்டிக்காட்டினேன்.
அத்தோடு மக்களின் பூர்வீகக் காணிகள் நந்திக்கடல் களப்பின் அருகோடு இருப்பதனால், அவர்களுக்கு நந்தித்கடல் களப்பு பெரும் வாழ்வாதார வளமாக இருந்துவந்துள்ளது. இது தவிர இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள மக்களின் பூர்வீக காணிகள் ஒவ்வொன்றுக்குள்ளும் தென்னை உள்ளிட்ட பல்வேறு பலன்தரு மரங்கள் காணப்படுவதுடன், பயிர்ச்செய்கை நிலங்களும் காணப்படுகின்றன. இத்தகைய வளம் மிக்க காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருப்பதால் அந்த மக்களின் வாழ்வாதாரம் பல வழிகளிலும் பாதிக்கப்படுகிறது என்ற விடயத்தினை இதன்போது ஜனாதிபதியிடம் தெளிவுபடுத்தியிருந்தேன்.
எனவே அந்தக் காணிகளை உடனடியாக விடுவித்து, மக்களை அங்கு மீளக்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என ஜனாதிபதியிடம் வலியுறுத்தினேன்.
அத்தோடு கேப்பாப்புலவு மக்கள் தமது காணி விடுவிப்பினை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில் இந்த அரசாங்கம் தமது காணிகளை விடுவிக்கும் என்ற பெருத்த எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் போராட்டங்களை மேற்கொள்ளாது தமது பூர்வீக காணி விடுவிப்பிற்காக கேப்பாப்புலவு மக்கள் காத்திருக்கின்றனர் என்பதை இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தேன்.
எனவே கேப்பாப்புலவு மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் அவர்களின் காணிகளை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் தொடர்ந்து வலியுறுத்தினேன்.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் இராணுவத்துடன் தாம் கூடிய விரைவில் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
அந்த கலந்துரையாடலில் எட்டப்பட்ட முடிவுகள் தம்மால் வெளிப்படும் எனவும் ஜனாதிபதியால் தெரிவிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இதன்போது தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





