கையிருப்பில் உள்ள எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது அரச, தனியார் துறையின் பொறுப்பாகும்!

மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரமடைந்துள்ள மோதல் நிலைமைக்கு மத்தியில் எதிர்வரும் காலப்பகுதிகளில் எரிபொருள் இறக்குமதிக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருளை மிகவும் சிக்கனமான முறையில் பயன்படுத்துவது அரச மற்றும் தனியார் துறைகளின் பொறுப்பாகும். அதற்கமைய, அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்லும் பொருட்டு, அறிவுறுத்தப்பட்டுள்ள வழிகாட்டல்களை விரைவாக செயற்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

விசேட வழிகாட்டல்கள் குறித்து அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதான செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அரசியலமைப்பால் ஸ்தாபிக்கப்பட்ட நிறுவன பிரதானிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அலுவலக சேவையாளர்கள் போக்குவரத்து மற்றும் எரிபொருள் முகாமைத்துவம் 

உத்தியோகத்தர்கள் கடமைக்கு சமுகமளிக்கும் போது பிரத்தியேக வாகனத்தை பயன்படுத்துவதற்கு பதிலாக இயலுமான வகையில் பொது போக்குவரத்து சேவையையோ அல்லது குழுவாகவே போக்குவரத்து சேவையை பயன்படுத்த வேண்டும்.அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் அலுவலக வாகனங்களை பயன்hடுத்த வேண்டும், அதற்கான வழிகாட்டல்கள் நிறுவன மட்டத்தில் தயாரிக்க வேண்டும்.

கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு தூர பிரதேசத்தில் இருந்து அதிகாரிகளை அழைப்பதை மட்டுப்படுத்தி நிகழ்நிலை முறைமை அல்லது தொழில்நுட்ப அணுகுமுறைகளை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.அதேபோல் ஆவணங்கள் மற்றும் தகவல் பரிமாற்றங்களை மின்னஞ்சல் மற்றும் வட்சப் முறைமை ஊடாக அனுப்புதல் அவசியமாகும்.

பாதுகாப்பு மற்றும் சுகாதார சேவைகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்காக மேலதிகமாகவே கையிருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். அதற்காக உரிய நடவடிக்கைகளை நிறுவன மட்டத்தில் மேற்கொள்ள வேண்டும்.

அரச துறையில் தற்போது தற்போது பயன்பாட்டில் இயங்கக்கூடிய தரத்தில் 92 ஆயிரம் வாகனங்கள் உள்ளன.இந்த அனைத்து வாகனங்களுக்குமான எரிபொருளை இயலுமான அளவில் சேமித்தால் எரிபொருள் கையிருப்பை பாதுகாக்க முடியும்.

 மின்சாரம் மற்றும் வலுசக்தி பாதுகாப்பு

இயற்கையாள வெளிச்ச மூலங்களை இயலுமான வகையில் பயன்படுத்த வேண்டும்.இயலுமான சந்தர்ப்பங்களில் மேசை விளக்குகளை பாவித்து, மின்விளக்குகளை அணைத்து வைப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க  வேண்டும்.இரவு வேளைகளில் அவசியமான இடங்களுக்கு மாத்திரம் மின்விளக்குகளை ஒளிரச் செய்வதற்குரிய ஆலோசனைகளை நிறுவன காவலாளிகளுக்கு அறிவுறுத்தல் வழங்குங்கள்.

உள்ளுராட்சிமன்றங்களின் கீழ் உள்ள வீதி விளக்குகளை தேவையற்ற சந்தர்ப்பங்களில் அணைப்பதற்கு உரிய விசேட நடவடிக்கைகளை கட்டாயம் செயற்படுத்த வேண்டும்.இரவு வேளையில் அவசியமான இடங்கள், வீதிகளுக்கு மாத்திரம் மின்விளக்குகளை ஒளிரச் செய்ய வேண்டும்.

இரவு 09 மணிக்கு பிறகு பொது இடங்களில் வர்த்தக விளம்பரங்கள் மற்றும் பொது விளம்பரங்களுக்கு பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகள் அணைக்கப்பட வேண்டும்.

நிறுவன கண்காணிப்பு நடவடிக்கைமுறை

நிறுவனத்தில் தேவையான தொழில்நுட்ப வசதிகள் காணப்படுமாயின், சேவையாளர்களை அலுவலகத்துக்கு அழைக்காமல் நிகழ்நிலைமை முறைமை ஊடாக வீட்டில் இருந்து சேவையாற்றும் முறைமையை நிறுவன பிரதானிகள் அமுல்படுத்த வேண்டும்.

சகல அரச உத்தியோகத்தர்கள் இந்த  வெளியக நெருக்கடியின் போது நாட்டு மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும்.  தேசிய வலுசக்தி பாதுகாப்புக்கு அனைவரும் இயலுமான வகையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

சமீபத்திய செய்திகள்