நிந்தவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் ஏ.எல்.எம்.சலீம் இன்று காலை 08 மணியளவில் தனது 75வது வயதில் நிந்தவூர் இல்லத்தில் காலமானர்.
இவர் ஓய்வுபெற்ற வைத்திய அதிகாரி ஜெஸ்மின் சலீம் அவர்களின் அன்பு கணவரும், அகீலா, அகீல் ஆகியோரின் பாசமுள்ள தந்தையுமானவர்.
தினபதி, சிந்தாமணி, வீரகேசரி, தினக்குரல், தினகரன் உள்ளிட்ட பல பத்திரிகைளினது பிராந்திய செய்தியாளராக கடமையாற்றிய இவர், ஒரு சிறந்த ஆய்வுக் கட்டுரையாளருமாவார்.
சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக ஊடகப் பணி செய்தவர். ஊடகவியலாளர்கள் மத்தியில் மிகுந்த மதிப்பையும், மரியாதையும் பெற்றிருந்த இவர், எழுத்தை ஆளுகை செய்த ஆளுமையாகவும் திகழ்கின்றார்.
பல ஊடகவியலாளர்களுக்கு வழிகாட்டியாகவும், செய்திகளை எழுதுவதில் புதிய வடிவங்களையும், சொற்பிரயோகங்களையும் கையாண்டவராவார்.
அதுமட்டுமன்றி சகல அரசியல்வாதிகளுடனும் நெருக்கமான உறவைப் பேணிய ஒருவராகவும் காணப்பட்டார்.
ஊடகத்துறையில் அச்சமின்றி பணி செய்தார். அவரின் ஊடக ஆளுமை பலரை அச்சம் கொள்ளச் செய்தது. எந்தவொரு அரசியல்வாதியும், ஏனைய துறையினராக இருந்தாலும் அவர்களின் பணி குறித்து கேள்வி எழுப்புவதற்கு தயக்கம் காட்டாத ஊடக உலகின் சிங்கமாக நெஞ்சு நிமிர்த்தி பணி செய்தார்.
அதே வேளை, எல்லோருடனும் மிகவும் அன்பாகவும், சிரித்த மனதுடனும், நகைச் சுவையாகவும் பழகக் கூடியவராகவும் தமது வாழ்வினை முன்னெடுத்தவர்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இஷாவிற்கு பின்னர் நிந்தவூர் ரவாஹா பொது மையானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

