காவல் துறை அதிகாரி போல் நடித்து, வர்த்தகர்களை மிரட்டி பணம் பறித்து வந்த நபர் ஒருவர், போதைப்பொருளுடன் பாணந்துறை வலான ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வலான ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எனத் தன்னை அடையாளப்படுத்தி, வட்ஸ்அப் ஊடாக தங்கும் விடுதிகள் மற்றும் உணவக உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
அதற்கமைய, நேற்று புதன்கிழமை (25) மாலை களினிகம அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் வைத்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 25 கிராம் 620 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் அம்பலங்கொட பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இவர் ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல், கொள்ளை மற்றும் பணம் பறித்தல் போன்ற குற்றங்களுக்காக சிறைத் தண்டனை அனுபவித்தவர் என்பது தெரியவந்துள்ளது.
அம்பலங்கொட, இரத்தினபுரி, ஹொரணை, பாணந்துறை, மாரவில மற்றும் திருகோணமலை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள வர்த்தகர்களை இவர் ஏமாற்றி பணம் பறித்துள்ளமை விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.
இவ்வாறான பொலிஸ் அதிகாரி போல் நடித்து மிரட்டிப் பணம் பறிக்கும் சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இது போன்ற அச்சுறுத்தல்கள் நேர்ந்தால் உடனடியாக 119 அல்லது 118 ஆகிய அவசர இலக்கங்களுக்கோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அறிவிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பாணந்துறை வலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



