சிறிலங்கா ஜனாதிபதியின் ஆசீர்வாதத்துடன் அனுரகுமார இந்தியா சென்றார்

சிறிலங்கா ஜனாதிபதியின் முழுமையான ஆசீர்வாதத்துடன் தான் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்குச் சென்றுள்ளார். இந்திய  எதிர்ப்பு கொள்கையிலிருந்து விடுபட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்  விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (7) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உட்பட அவரது குழுவினர் ஜனாதிபதியின் முழுமையான ஆசீர்வாதத்துடன் தான் இந்தியாவுக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டுள்ளார்கள். இவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் வழங்குமாறு இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகருக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம்.

இந்திய உருளைக்கிழங்குகளை இலங்கையில் விற்பனை செய்தவர்களைக் கொலை செய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியினர் கடந்த காலங்களில் பிரசாரங்களை முன்னெடுத்தனர். இந்திய எதிர்ப்பு கொள்கைகளைத் தொடர்ந்து 60 ஆயிரம் பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. நாடும் பாரிய விளைவுகளை எதிர்கொண்டது.

மக்கள் விடுதலை முன்னணியினர் இந்திய எதிர்ப்பு கொள்கையிலிருந்து விடுபட்டு நடைமுறைக்கு ஏற்றாட் போல் செயற்பட முனைவது வரவேற்கத்தக்கது. மக்கள் விடுதலை முன்னணியின் மாற்றம் மகிழ்வுக்குரியது என்றார்.