இஷாரா செவ்வந்தியுடன் நேபாளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட தக்ஷி என்ற பெண் தொடர்பில் இஷாரா செவ்வந்தி வாக்குமூலம் வழங்கியுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
சட்டத்தரணிகள் போன்று வேடமணிந்து நீதிமன்றத்துக்குள் நுழைந்த இஷாரா செவ்வந்தி உட்பட இருவரே “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரை சுட்டுக்கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து, இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் 14 கைதுசெய்யப்பட்டார்.
நேபாள அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மூன்று நாட்களாக நேபாளத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இஷாரா செவ்வந்தி இவ்வாறு கைதுசெய்யப்பட்டார்.
இஷாரா செவ்வந்தியுடன் “கம்பஹா பபா” , “ஜேகே பாய்”, தக்ஷி என்ற பெண் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட அனைவரும் நாட்டுக்கு அழைத்துவருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் ஒக்டோபர் 15 நேபாளம் நோக்கி பயணித்து அவர்களை இரவு நேரத்தில் நாட்டுக்கு அழைத்துவந்தனர்.
நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றார்.
இந்நிலையில், இஷாரா செவ்வந்தியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இஷாராவின் முகத்திற்கு ஒத்த உருவத்தை கொண்ட பெண் ஒருவரை தேடி வந்த காலப்பகுதியில் “ஜாஃப்னா சுரேஷ்” என்பவருக்கு தக்ஷி என்ற பெண் அறிமுகமானதாகவும், வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாக கூறி தக்ஷியை ஏமாற்றி நேபாளத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
தக்ஷி என்ற பெண்ணுக்கு பெரிதளவு சிங்கள மொழி தெரியாததால் அவருக்கு எதுவும் கூறாமல் அவரை நேபாளத்திற்கு ஏமாற்றி அழைத்துச் சென்றதாக இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து இஷாரா செவ்வந்தி கிளிநொச்சியில் தலைமறைவாக இருந்த இடத்தை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.