தமிழ்த்தேசியத்தை நேசிப்பவர்களுக்கு இடர்வரும் போது கரம் கொடுக்க வேண்டியது ஈழத்தமிழினத்தின் கடமை. சிவாஜிலிங்கம் அண்ணைக்கு மாத்திரமன்றி எமக்காக உயிர்கொடுத்த மாவீரர்களின் குடும்பங்கள், அங்கங்களை இழந்த போராளிகளுக்கும் இது பொருந்தும். இவர்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் தகும்? எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளருமான, சிரேஷ்ட சட்டத்தரணியுமான க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ்த்தேசியத்திற்காகக் களமாடிய, களமாடும் ஒவ்வொருவருக்கும் ஈழத்தமிழினம் நன்றிக்கடன் பட்டுள்ளது. 70 லட்சங்கள் அவரின் மருத்துவச் செலவுக்காகத் தேவைப்படுவதாகக் கூறப்படுகின்றது. ஆனால், உண்மையில் சத்திரசிகிச்சையின் பின்னரும் அண்ணனைப் பராமரிக்கப் பாதுகாக்க இன்னும் பணம் தேவைப்படும்.
சிவாஜிலிங்கம் அண்ணனுக்கு நாங்கள் கொடுத்த தொகையைக் குறிப்பிடுவதைத் தவிர்த்து மற்றவர்களும் பங்களிக்க ஏதுவாக வங்கியிலக்கத்தை மாத்திரம் பகிர்வது நல்லது என்று கருதுகின்றேன். அண்ணன் சிவாஜிலிங்கத்துடன் சேர்ந்து பயணிப்பதையிட்டுப் பெருமை கொள்வதுடன் அண்ணனின் உடல்நலம் பலம்பெறச் சகல வழிகளிலும் தோள் கொடுப்போம் என அன்புரிமையுடன் வேண்டுகின்றேன் எனவும் அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.



