தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான அறிக்கையை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மூடிமறைக்க முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான கண்டுபிடிப்புகளை மறைக்கும் நோக்கில், அமைச்சர் பல நாட்களாக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் தங்கியிருப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்த விவகாரமானது அரசாங்கத்துடன் தொடர்புடைய ஒரு பாரிய மோசடி எனச் சுட்டிக்காட்டிய அவர், இது நாட்டின் மின்சார நிலைமையை மேலும் மோசமாக்கக்கூடும் எனவும் எச்சரித்தார்.
அத்துடன், இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படாவிட்டால், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் மின்சாரம் இன்றி ஜெனரேட்டர்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





