திறமைகளை மேம்படுத்த ஒத்துழைப்பு வழங்குங்கள்

பாடகி யொஹானியை கௌரவித்ததை போன்று மாணவன் ரிசுதன், சாருதன் மற்றும் 72 வயது வீராங்களை அகிலத் திருநாயகி ஆகியோரை கௌரவித்து அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.

கிழக்கு மாகாணத்தில் திறமையான இளைஞர்கள் உள்ளார்கள் அவர்களை அடையாளப்படுத்த உரிய திட்டங்களை செயற்படுத்துங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் விளையாட்டுத்துறை அமைச்சிடம் வலியுறுத்தினார்.

மாணவன் ரிசுதன் செல்வசேகரன், விளையாட்டுத்துறை அமைச்சரை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளேன்.

அதற்கிணங்க விளையாட்டுத்துறை அமைச்சின் மூலம் அவருக்கு செய்யக்கூடிய அனைத்து உதவி ஒத்துழைப்புகளையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த 72 வயது வீராங்கனைக்கு உரிய ஒத்துழைப்புக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (4) இடம்பெற்ற  2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்  விளையாட்டுத்துறை, இளைஞர்  விவகாரங்கள் அமைச்சு  மற்றும் மகளிர்,சிறுவர் விவகார ,சமூக வலுப்படுத்துகை அமைச்சு ஆகியவற்றுக்கான  செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தின் போது  உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விளையாட்டுத்துறையில் திறமையான வீரர்கள் உள்ளார்கள்.ஆகவே அவர்களின் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய வாய்ப்புக்களை வழங்க வேண்டும்.இவ்விடயத்தில் மாவட்ட அபிவிருத்தி குழு தலையிட கூடாது,ஏனெனில் இவர்கள் அரசியல் நோக்கத்துடன் செயற்படுகிறார்கள்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.அங்கு உள்ள திறமையான இளைஞர் வீர,வீராங்கனைகளை அடையாளப்படுத்த தேசிய இளைஞர் மன்றம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.அல்லது விளையாட்டுத்துறை அமைச்சு ஊடாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.எங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டாம்.

இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் 13 வயதுக்குட்பட்டோருக்கான இரண்டாம் கட்ட முதல்தர போட்டியில் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் மாணவன் செல்வசேகரன் ரிசு தன் அபாரமாக பந்து வீசி ஓட்டங்கள் எதனையும் வழங்காது 8 விக்கெட்டுகளை வீழ்த்தி பாடசாலை மட்டத்தில் சாதனைப் படைத்துள்ளார்.

இந்த மாணவனின் குடும்பம் கொழும்பில் உள்ளார்கள்,ஆகவே இந்த மாணவனின் விளையாட்டு திறமையை மேம்படுத்த விளையாட்டுத்துறை அமைச்சு மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,புலமை பரிசில்களை வழங்க வேண்டும் என்பதை கேட்டுக் கொள்கிறேன்.

அத்துடன்,19 வயதுக்கு குறைந்த போட்டிக்கு சாருதன் சண்முகநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.விளையாட்டுத்துறையில் இன,மத என்ற வேறுப்பாடு பார்ப்பதில்லை.அண்மையில் பிலிப்பைன்ஸ்  நாட்டில்  நடைபெற்ற நேஷனல் மாஸ்டர்ஸ் என்ட் சீனியர் அத்லடிக்ஸ்  போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய முல்லைத்தீவை சேர்ந்த வீராங்கனை அகிலத் திருநாயகி  இரண்டு தங்கப்பதக்கங்களை தனதாக்கி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

பாடகி யொஹானிக்கு பத்தரமுல்லை பகுதியில் காணி வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது, நான் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனக்கும் அவரது பாடல் பிடிக்கும்.அவரை கௌரவப்படுத்தியதை போன்று இவர்களையும் கௌரவப்படுத்துங்கள் என்றார்.

இதன்போது எழுந்து பதிலளித்த விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர்     ரோஹன திஸாநாயக்க பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மாணவன் ரிசுதன் சாதனை படைத்துள்ளார் விளையாட்டுத்துறை அமைச்சரின் வழிகாட்டலுக்கு அமைய   நான் அந்த கல்லூரியின் அதிபரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கலந்துரையாடி னேன்.

அந்த வகையில் அடுத்த வாரம் அந்த மாணவனுக்கு விளையாட்டுத்துறை அமைச்சரை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளேன். அதற்கிணங்க விளையாட்டுத்துறை அமைச்சின் மூலம் அவருக்கு செய்யக்கூடிய அனைத்து உதவி ஒத்துழைப்புகளையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த 72 வயது வீராங்கனைக்கு உரிய ஒத்துழைப்புக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.