‘தெமட்டகொட ருவான்’ பிணை விவகாரம்: 50 இலட்சம் இலஞ்சம் வாங்கியவர் மீள விளக்கமறியல்!

சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ‘தெமட்டகொட ருவான்’ எனப்படும் போதைப்பொருள் கடத்தல்காரருக்கு பிணை பெற்றுக்கொடுப்பதற்காக 50 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா இன்று வெள்ளிக்கிழமை (13) உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முஹமட் மொஹிதீன் சப்ராஸ் நவாஸ் என்பவரே இவ்வாறு மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் தலைவருமான ஆர். துமிந்த சில்வாவிடம் வாக்குமூலம் ஒன்றினைப் பதிவு செய்வதற்கு இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.

சந்தேகநபரான சப்ராஸ் நவாஸ், ‘தெமட்டகொட ருவான்’ என்பவருக்கு பிணை பெற்றுத் தருவதாகக் கூறி 50 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட போதே கைது செய்யப்பட்டதாக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.