தேசிய பாதுகாப்பு மிக உயர்ந்த மட்டத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது

தற்போதைய அரசாங்கம் பதவியேற்றது முதல் நாட்டின் தேசிய பாதுகாப்பு மிக உயர்ந்த மட்டத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தற்போது நிலவும் சூழ்நிலைகள் காரணமாக பொதுப்பாதுகாப்பு தொடர்பான சில கவலைகள் எழுந்தபோதிலும், அந்தப் பிரச்சினைகளுக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. அத்துடன், தானும் தனது குழுவினரும் அரசியலமைப்பு மற்றும் நிறுவப்பட்ட கொள்கைகளுக்கு இணங்க அனைத்து ஆக்கப்பூர்வமான திட்டங்களையும் செயற்படுத்தி வருகின்றோம்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் எடுக்கப்பட்டு வரும் நேர்மறையான நடவடிக்கைகளை எதிர்க்கட்சியினர் நாளாந்தம் விமர்சித்து வருகின்றனர். மேலும், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நியமனம் மற்றும் போகம்பரை சிறைச்சாலையை மீண்டும் நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளமை உள்ளிட்ட விடயங்கள் குறித்து தேசிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் வரும் நாட்களில் தெளிவுபடுத்துவார் என்றார்.