நடத்துனர் இல்லாத பஸ் சேவை மூலம் வருமானம் அதிகரித்துள்ளது

பொது போக்குவரத்து பஸ்  சேவைக்காக  ஈ – டிக்கெட்டிங் முறைமையை தயாரிப்பதற்கு பன்னிரண்டு நிறுவனங்கள் முன் வந்துள்ளன.

அத்துடன் பயணிகள் பஸ் வண்டிகளில் நடத்துனர் இல்லாத பஸ் சேவை  மூலம் வருமானம் அதிகரித்துள்ளது என ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் காவிந்த ஜயவர்தன  எம். பி எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே  இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பொது போக்குவரத்து பஸ் சேவைக்காக  ஈ – டிக்கெட்டிங் முறைமையை தயாரிப்பதற்கு பன்னிரண்டு நிறுவனங்கள் முன் வந்துள்ளன. ஈ-டிக்கெட்டிங் முறைமைக்குள் கியூ. ஆர் மற்றும் காட்  முறைமையையும் உட்படுத்தி  டிக்கெட் விநியோகிக்க முடியும்.

ஈ-டிக்கட்டிங் தற்போது மிக அவசியமாகிறது. டிக்கெட் வழங்காத நடத்துனர்கள் பலர் தற்பொழுது வேலை நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இத்தகைய நிலையில் நடத்துனர் இன்றி சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வரும் பஸ்களின் வருமானம் பாரிய அளவில் அதிகரித்துள்ளது.

அத்துடன், இலங்கை போக்குவரத்து சபையில் பல்வேறு ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகள் இடம் பெற்றுள்ளன. அதனை தடுக்கும் வகையிலேயே மேற்படி நிறுவனத்தின் தலைவராக அரச சேவையில் மிகுந்த அனுபவம் கொண்ட பொறியியலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது நிர்வாகத்தின் கீழ் டயர் ஒன்றை ஒன்பதாயிரம் ரூபா என்ற குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடிந்துள்ளதுடன், 8,000 கிலோ மீற்றருக்கு அதனை உபயோகிக்க முடியும்.

நீண்ட காலமாக விநியோகஸ்தர்கள் இதற்கு எதிராகவே செயல்பட்டு வந்துள்ளனர். அந்த வகையில் பெறுகைக் கோரல் மற்றும் கொள்வனவு நடவடிக்கைகளை டிஜிட்டல் மயப்படுத்தும் வரை இத்தகைய முறைகேடுகளை நிறுத்துவது கடினமாகும்.

டிஜிட்டல் மயப்படுத்தலோடு ஒப்பிடுகையில் நமது நாடு வெட்கப்படக் கூடிய நிலையில் காணப்படுகிறது.

ஒரே உபகரணம் 4 டிப்போக்கள் மூலம் ஒவ்வொரு விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் எதிர்காலத்தில் முறையான வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படும் என்றார்.