நாள் சம்பளத்தை ரூ.3,000 ஆக கூட்டுக!

நாட்டில் ஏற்பட்டிருக்கும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 3 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்குமாறு அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

அந்த சங்கம், ஹட்டனில் புதன்கிழமை (19) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அச்சங்கத்தின் செயலாளர் ஜே.எம்.ஏ.பிரேமரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது வழங்கப்படும் 1,000 ரூபாய் நாளாந்த சம்பளம் 2015 ஆம் ஆண்டு கோரப்பட்ட சம்பளமாகும்.  எனினும், அந்த சம்பளம் எட்டு வருடங்களுக்குப் பின்னர் கிடைத்துள்ளது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்குள் இச்சம்பளம் போதுமானதாக இல்லை என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரதான உணவுகள் கோதுமைமாவினால் தயாரிக்கப்படுகின்றது. கோதுமையின் விலை ஒரு கிலோ கிராம் 10 ரூபாயால் குறைக்கப்பட்டாலும் அதனால், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்விதமான இலாபமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.