நீர்கொழும்பு சிறை மோதலுக்கு பொறுப்பேற்று நீதி அமைச்சர் பதவி விலக வேண்டும்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் முதல்நாளிலேயே நடவடிக்கை எடுத்திருந்தால், அதிகாரிகளின் மரணங்களை தடுத்திருக்கலாம். பொறுப்பை நிறைவேற்ற தவறிய நீதி அமைச்சர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்பதுடன் அவர் பதவி விலகி முன்மாதிரியாக செயற்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார்.

கம்பஹா பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தினால் இதுவரை சிறைச்சாலை அதிகாரிகள் 8பேரும் 21 கைதிகளும் மரணித்துள்ளனர். சிறைச்சாலையில் மோதல் சம்பவம் இடம்பெற்ற முதல்நாளில் இரண்டு கைதிகள் மாத்திரமே உயிரிழந்திருந்தனர்.அன்றைய தினமே சம்பவத்துக்கு காரணமானவர்களை அங்கிருந்து அகற்றியிருந்தால், இந்த பிரச்சினை இந்தளவு தூரம் சென்றிருக்காது. சிறைச்சாலை அதிகாரிகள் யாரும் மரணித்திருக்கவும் மாட்டார்கள்.

ஆனால் சிறைச்சாலையில் முதல்நாள் இடம்பெற்ற மோதல் தொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான நீதி அமைச்சர் எந்த தகவலும் அறியாமல் இருந்துள்ளார். அவர் சமூகவலைத்தளங்களை பார்த்துத்தான் இந்த விடயங்களை அறிந்துகொள்வதுபோன்றே ஊடகங்களுக்கு பதிலளித்திருந்தார்.

பொறுப்புவாய்ந்த ஒரு அமைச்சரிடமிருந்து இவ்வாறான பொறுப்பற்ற பதிலை யாரும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. நீதி அமைச்சர் பொறுப்புடன் செயற்பட்டிருந்தால், இந்த சம்பவத்தை ஆரம்பத்திலேயே தடுத்திருக்கலாம்.

அதனால் தனது பொறுப்பை சரியாக நிறைவேற்ற தவறிய நீதி அமைச்சர், பதவி விலகி முன்மாதிரியாக செயற்பட வேண்டும் என்பதுடன் பொறுப்பை நிறைவேற்ற தவறியமைக்காக நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும். ஏனெனில், முதல் நாள் சம்வத்தின்போதே நீதி அமைச்சர் உடனடியாக செயற்பட்டு, நடவடிக்கை எடுத்திருந்தால், இந்தளவு பாரிய பிரச்சினையாக மாறி இருக்காது.

அதேநேரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்காக 10இலட்சம் ரூபா நட்ட ஈடு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. அதனை நாங்கள் வரவேற்கிறோம். இன்னும் அதிகம் வழங்க முடியுமாக இருந்தாலும் பரவாயில்லை.

அத்துடன் மரணித்த சிறைக்கைதிகளுக்காகவும் நட்டஈடு வழங்கப்பட வேண்டும். அவர்கள் தண்டனைக்குரியவர்களாக இருந்தாலும் அவர்களும் அரச கட்டுப்பாட்டுக்குள் இருப்பவர்கள். மரணித்தவர்கள் அனைவரும் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்க முடியாது.அவர்களில் சந்தேக நபர்களும் இருப்பார்கள். அதனால் சிறைக்கைதிகள் தொடர்பாகவும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.