பாடப்புத்தகங்களில் எவ்விடத்தில் ஆபாசமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பகிரங்கமாக குறிப்பிட வேண்டும்.இவ்விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவருடனோ அல்லது எதிர்க்கட்சி உறுப்பினர்களுடனோ பகிரங்க விவாதத்தில் ஈடுபட தயார். முன்வைத்த குற்றச்சாட்டுக்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. மகாநாயக்க தேரர்கள் ஏற்றுக்கொண்ட தர்மச்சக்கரத்தை பயன்படுத்துவதா? அல்லது சஜித் பிரேமதாச, ரோஹிணி கவிரத்ன குறிப்பிடும் தர்மச்சக்கரத்தை பயன்படுத்துவதா? என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வியெழுப்பினார்.
புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் தெளிவுப்படுத்துகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரசாங்கம் எடுக்கும் தீர்மானத்தை ஒரு தரப்பினர் எதிர்த்தாலும் அதனை செயற்படுத்த முடியும்.உதாரணமாக ஒரு இடத்தில் வீதியை அமைக்கும் போது ஒருதரப்பினர் எதிர்த்தால் பொது நலனை கருத்திற் கொண்டு அரசாங்கத்தால் எதிர்ப்புக்கு மத்தியில் அதனை செயற்படுத்த முடியும்.
கல்வி கொள்கை தொடர்பாக எடுக்கும் தீர்மானத்தை ஒருவழி பாதையில் மாத்திரம் செயற்படுத்த முடியாது. கல்வியில் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் உட்பட ஒட்டுமொத்த சமூகமும் தொடர்புப்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கை தொடர்பில் ஒரு தரப்பினர் குறுகிய அரசியல் நோக்கத்துக்காக மக்கள் மத்தியில் திரிபுப்படுத்தப்பட்ட வகையில் போலியான விடயங்களை முன்வைக்கும் போது அதனால் பெற்றோரில் ஒரு தரப்பினர் அவநம்பிக்கை கொண்டிருந்தால் அது குறித்து அரசாங்கம் என்ற அடிப்படையில் அவதானம் கொள்ள வேண்டும்.
கல்வி என்பது உணர்வுபூர்வமானது. நிறைவேற்று அதிகாரம் மற்றும் பாராளுமன்ற அதிகாரம் உள்ள காரணத்தால் இவ்விடயத்தில் தன்னிச்சையாக செயற்பட முடியாது. முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் மற்றும் சந்தேகங்கள் களையப்பட வேண்டும் என்பதற்காகவே புதிய கல்வியில் ஒரு தொகுதியை மாத்திரம் 2027 ஆம் ஆண்டு அமுல்படுத்த ஜனாதிபதி தீர்மானித்தார். குறுகிய காலத்துக்குள் மக்களுக்கு உண்மையை தெளிவுப்படுத்துவோம்.கல்வித்துறையில் உள்ள சகல தரப்பினரின் ஒத்துழைப்புடன் புதிய கல்வி கொள்கையை அமுல்படுத்துவதே எமது நோக்கம்.
தர்மச்சக்கர விவகாரம்
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன பாராளுமன்றத்தில் ஊடகச் சந்திப்பை நடத்தி ‘ 6 ஆம் தர ஆங்கில புத்தகத்தில் மாத்திரமல்ல பௌத்த மத புத்தகத்திலும் தர்மச் சக்கரம் தவறாக அச்சிடப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டார்.நாட்டில் பௌத்த மதத்தை அழிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவரும் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க முயற்சித்தார்.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தர்மச்சக்கரம் தொடர்பில் எழுந்த சர்ச்சைக்கு புத்தசாசன அமைச்சு திரிபீடக சபை ஊடாகவே 2024.08.29 ஆம் திகதியன்று தீர்வு கண்டது. மகாநாயக்க தேரர்கள், கல்வி அமைச்சு மற்றும் புத்தசாசன அமைச்சு ஏற்றுக்கொண்ட தர்மச்சக்கரமெ புதிய பௌத்த மத பாடப்புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற 2600 ஆவது சம்புத்த ஜயந்தி நிகழ்வின் போது பயன்படுத்தப்பட்ட தர்மச்சக்கரமே புதிய பாடப்புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் திரிபுப்படுத்த வகையில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்.தர்மச்சக்கரம் தவறாக அச்சிடப்பட்டுள்ளது ஆகவே புதிய கல்வி கொள்கை வேண்டாம் என்று குறிப்பிடுகிறார்கள். சஜித் பிரேமதாச, ரோஹிணி கவிரத்னவின் தர்மச்சக்கரத்தை ஏற்றுக்கொள்வதா அல்லது மகாநாயக்க தேரர்கள் ஏற்றுக்கொண்ட தர்மச்சக்கரத்தை ஏற்றுக்கொள்வதா? என்பதற்கு பதிலளிக்க வேண்டும்.
பாடப்புத்தகத்தில் எவ்விடத்தில் ஆபாச விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன ?
கல்வித் துறைக்கு ஒவ்வொரு ஆண்டும் அதிகளவில் நிதி ஒதுக்கப்படுகிறது. பாடசாலை உட்கட்டமைப்பு அபிவிருத்தி கல்வி மறுசீரமைப்புக்கு 17,542 மில்லியன் ரூபா 2026 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் இலவச கல்வியை இல்லாதொழிக்கிறது. ஆபாச விடயங்களை உள்ளடக்கியுள்ளது.தன்பாலினத்தை ஊக்குவிக்கிறது என்று குறிப்பிட்டுக் கொண்டு விமல் வீரவன்ச கல்வி அமைச்சின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார்.இதனையே எதிர்க்கட்சித் தலைவரும் மத்துகமையில் குறிப்பிட்டார்.
ஆறாம் தர ஆங்கில பாடப்புத்தகத்தில் 14 பாடங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மொழி மற்றும் இலக்கிய பாடப்புத்தகத்தகத்தில் ‘ சிநேகபூர்வமான கலந்துரையாடல்’ என்ற பாடம் உள்ளடக்கப்பட்டுள்ளது.இதில் இரண்டு ஆண் பிள்ளைகள் உரையாடுவதையும் எதிர்க்கட்சியினர் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிப்பார்கள்.
பாடப்புத்தகங்களில் எவ்விடத்தில் ஆபாசமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பகிரங்கமாக குறிப்பிட வேண்டும்.இவ்விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவருடனோ அல்லது எதிர்க்கட்சி உறுப்பினர்களுடனோ பகிரங்க விவாதத்தில் ஈடுபட தயார். முன்வைத்த குற்றச்சாட்டுக்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
ஆறாம் தர மாணவர்களுக்கு தகவல் மற்றும் தொழில்நுட்பத்தை கற்பிப்பதில் என்ன பிரச்சினை உள்ளது. ஏன் மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத்தை கற்பிக்க கூடாது. போலியான குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சியினர் முன்வைத்து தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்தினார்கள்.
மாணவர்களுக் சுகாதாரத்தை முறையாக கற்பித்தால் தான் கர்ப்பக்குழாயை பிடித்து கர்ப்பத்தடை செய்ய முடியாது என்பதை அறிவார்கள். புவியியல் பாடத்தை முறையாக கற்பித்தால் தான் பூமியை பிளந்து பாம்பு வராது என்று அறிவார்கள்.புதிய கல்வி மறுசீரமைப்பை நிச்சயம் அமுல்படுத்துவோம். திட்டமிட்ட வகையில் நெருக்கடியை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.




