மட்டக்களப்பு பாலமீன்மடு கிராமத்தில் 90 வீதம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள போதும் மாநகரசபை உறுப்பினர் வழங்கிய 25 குடும்பங்களின் பெயர் பட்டியலுக்கு மாத்திரம் 25 ஆயிரம் வழங்கி முறைகேடு இடம் பெற்றுள்ளதுடன் 25 குடும்பங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக எங்களை பொய் கூறுமாறு பிரதேச செயலாளர் கூறுகிறார். எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் இல்லாவிடில் பிரதேச செயலகத்தை முற்றுகையிடுவோம் என கிராம சங்கங்களின் தலைவர்கள் ஒன்றிணைந்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியா கற்கை நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண மீனவர் தொழிற்சங்கத்தின் தலைவர் இ.பத்மநாதன், பிரஜா சக்தி கிராம தலைவர் தேவிபாலா மற்றும் வர்த்தகரான அந்தனிசில் ராஜ்குமார் ஒன்றிணைந்து இவ்வாறு தெரிவித்தனர்.
மாவட்டத்தில் சிறிய மழை வெள்ளத்தினால் பாதிக்கபடும் ஒரு சிறிய கிராமம் பாலமீன்மடு கிராமம். இந்த கிராமம் உன்னிச்சையில் குளத்தில் இருந்து மற்றும் அம்பாறை மாவட்ட குளங்களில் இருந்து வரும் வெள்ளநீர் பாலமீன்மடு கிராமத்துக்கு ஊடாகத்தான் கடலுக்கு வழிந்தோடுகிறது இவ்வாறு இந்த கிராமம் பெரும் வெள்ளத்தில் பாரிய அனர்த்தை சந்தித்து.
இந்த கிராமத்தில் 410 குடும்பங்கள் இருக்கின்ற போதிலும் 90 வீதமான குடும்பங்கள் இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டன. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களை பதிவிடுவதாக கிராம உத்தியோகத்தர் 11ம் திகதி பதிவுகளை மேற்கொண்டார்.
இவ்வாறு 11 திகதி பதிவுகளை மேற்கொண்டவர் பாதிக்கப்பட்டவர்கள் எவருக்கும் நிதி வழங்காமல் இந்த பதிவு இடம்பெறும் முன்னர் தமிழரசு கட்சியின் மாநகர சபை உறுப்பினர் தான் உட்பட 25 பேருடைய பெயர் பட்டியலை வழங்கியுள்ளார்.
இந்தப் பட்டியலுக்கு அமைவாக வீடு சுத்தப்படுத்த 25 ஆயிரம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது இது பாரிய மோசடியான விஷயம் இதை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
11 ஆம் திகதி பதியப்பட்டதன் பின்னர் 12 ம் திகதி அறிந்து கொண்டோம் மாநகரசபை உறுப்பினர் அருணன் என்பவரால் வழங்கப்பட்ட பெயர் பட்டியலில் உள்ளவர்களுக்கு வீடு சுத்தம் செய்ய 25 ஆயிரம் ரூபா நிதி வழங்கப்பட்டதாக அறிந்து கொண்டோம்.
இதையடுத்து கிராம உத்தியோகத்தருடன் தொடர்பு கொண்டு ஆர்ப்பாட்டம் செய்ய போவதாக கூறியதையடுத்து செய்ய வேண்டாம் நாங்கள் பிரதேச செயலாளருடன் சந்திக்க வருவதாக தெரிவித்து 13 ம் திகதி பாலமீன்மடு கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் கூட்டம் இடம் பெற்றது.
அந்த கூட்டத்திற்கு பிரதேச செயலாளர், வரவில்லை நிர்வாக உத்தியோகத்தர் கிராம உத்தியோகத்தர் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் சகிதம் ஆஜராகினர் அதன்போது இடம்பெற்ற மோசடியை மக்கள் எடுத்து காட்டினார் இதையடுத்து எதிர்வரும் வியாழக்கிழமை 18ம் திகதி நிதி வழங்கப்படும் என உறுதிமொழி வழங்கினார்.
அதன் பின்னர் நாங்கள் 14ம் திகதி ஜனாதிபதி காரியாலயத்துடன் தொடர்பு கொண்ட போது உடனடியாக பிரதேச செயலாளரை தொலைபேசியில் இணைத்து இவ்வாறு ஒரு முறைப்பாடு வந்துள்ளதாக தெரிவித்து நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதன் பிரகாரம் திங்கட்கிழமை பிரதேச செயலாளரை காரியாலயத்தில் சந்தித்த போது அவர் எங்களை ஏன் ஊடகங்களுக்கு தெரிவித்தீர்கள் என்னிடம் வந்திருக்க வேண்டும் என்பதுடன் 310 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் நிதியை யாரிடம் இருந்து பெற்று வழங்குவது என கூறியதுடன் பாலமீன்மடு கிராமத்தில் 25 குடும்பங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டதாக எங்களை பொய் கூறுமாறு பிரதேச செயலாளர் சொல்லுகின்றார்.
ஜனாதிபதி பாதிக்கப்பட்ட ஒருவர் கூட விடுபடக்கூடாது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் நிதியை வழங்குங்கள் போதியளவு நிதி உள்ளதாக சொல்லுகின்றார்.
ஆனால் ஜனாதிபதி சொல்வது ஒன்று இங்கு நடப்பது ஒன்று 25 குடும்பங்களும் முகாமில் இருந்ததால் வழங்கப்பட்டதாக அவர் கூறினார். அப்போது அவரிடம் நாங்கள் ஜனாதிபதியின் சுற்று அறிக்கையில் முகாமில் தங்கி இருந்தவர்களுக்கு மாத்திரம் தான் 25 ஆயிரம் ரூபா வழங்குங்கள் என இருக்கின்றா? அவ்வாறாயின் முகாமில் இருந்தவர்களுக்கு மாத்திரம் நிதி வழங்கப்படும் என்றால் அதை எழுத்து மூலம் தருமாறு கோரினேன்.
அவர் ஒரு பிரதேச செயலாளர் மாதிரி எங்களுடன் நடந்து கொள்ளவில்லை மிரட்டும் தொனியில் நடந்து கொண்டார். தமிழரசுக்கட்சியின் மாநகரசபை உறுப்பினர் வழங்கிய பெயர் பட்டியலுக்கு மாத்திரம் நிதி வழங்கப்பட்டு முறைகேடு இடம்பெற்றுள்ளது எனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் .
பாதிக்கப்பட்ட மக்களிடம் நிதி எங்கே இருக்கிறது என பிரதேச செயலாளர் கேட்டால் பொதுமக்கள் ஆகிய நாங்கள் என்ன பதில் கூறமுடியும் ஜனாதிபதி நிதி இருக்கு வழங்குமாறு கூறுகிறார் ஆனால் இங்கு அரசியல்வாதிகளின் தலையீடுகள் ஊடாக மாநகரசபை உறுப்பினர் பட்டியலுக்கு அமைவாக 25 பேருக்கு மாத்திரம் 25 ஆயிரம் ரூபாவும் வழங்கியதுடன் ஒரு அமைப்பு வழங்கிய உணவு பொதிகளையும் அவர்களுக்கே வழங்கியுள்ளார் இது முற்றிலும் முறைகேடானது. எனவே உண்மையில் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு குறித்த நிதியை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிடில் கொழும்பு சென்று ஜனாதிபதியிடம் முறையிடுவோம் பிரதேச செயலகத்தை முற்றுகையிடுவோம் என கூட்டாக எச்சரிக்கை விடுத்தனர்.





