பாலியல் துஷ்பிரயோக முயற்சி ; மாணவன் வைத்தியசாலையில் அனுமதி ; ஆசிரியர் தலைமைறைவு

பாடசாலை ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் தலைமைறைவாகியுள்ளார்.

அம்பாறை மாவட்டம்  நிந்தவூர் பகுதியில் உள்ள பிரபல   அரச பாடசாலை ஒன்றில் கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி உடற்கல்வி   ஆசிரியரால்   விளையாட்டு அறையில் வைத்து பாலியல் ரீதியாக மாணவன்  துஷ்பிரியோக முயற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக  அதிபரிடம் முறையிடப்பட்டிருந்தது.

சம்பவம் இடம்பெற்று மறுநாள் பாதிக்கப்பட்ட  குறித்த மாணவன்  அதிபரிடம் முறையிட்டுள்ளதுடன்  இதுவரை இரு வாரங்கள் கழிந்தும்  எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் மூடி மறைப்பதற்கான முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நிந்தவூர் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில்  தரம் 9 ல் கல்வி கற்கின்ற தனது மகனிடம் வாக்குமூலம் ஒன்றை இரு தடவை பெற்று சென்றுள்ளதுடன், மகனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சி செய்ததாக கூறப்படும்  சந்தேக நபரான ஆசிரியர் தொடர்ந்தும் தலைமறைவாகி உள்ளதாக தாயார் குறிப்பிட்டார்.

இந்நிலையில்,  பாலியல் துஷ்பிரயோக முயற்சிக்கு  உட்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்படும் தனது மகன்  புதன்கிழமை (2) மாலை  கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,  குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார்  வாக்குமூலங்களை பெற்றுச்சென்றுள்ளதாக தாய் மேலும் குறிப்பிட்டார்.

இந்த விடயம்  தொடர்பில் எந்த தரப்பினரும் எமக்கு உதவவில்லை என கண்ணீர் மல்க பாதிக்கப்பட்ட மாணவனின் தாயார் ஊடகங்களிடம் தெரிவித்தார்.