கண்டியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் வீட்டு வேலைத் தொழிலாளர் சங்க பிரதிநிதிகள், தொழிலமைச்சரை நேரடியாகச் சந்தித்து தமது பிரச்சினைகள் தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை (04) கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர்.
மேற்படி சங்கத்தின் செயலாளர் சசிகலா தில்ருக்சி தலைமையில் சென்ற தூதுக்குழுவினர் உள்நாட்டு வீட்டு வேலைத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும், நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னான்டோ மற்றும், பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க உட்பட அதிகாரிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. அதன் போது பின்வரும் விடயங்கள் தொடர்பாக உறுதி வழங்கப்பட்டதாக மேற்படி சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு வீட்டுவேலைத் தொழிலாளர்கள் சந்திக்கும் பல்வேறு சவால்கள் பற்றியும் அவர்களுக்கு வலுவான ஒரு சட்டப்பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் தொழில் அமைச்சர் சாதகமான முடிவைத் தந்துள்ளதாகவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வேலைத்தளங்களில் ஏற்படும் பாலியல் தொந்தரவு மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பாகவும், குறைந்த பட்ச ஊதிய சட்டத்திலிருந்து வீட்டுவேலைத் தொழிலாளர்கள் ஒதுக்கப்பட்டமைதொடர்பாகவும் கலந்தரையாடப்பட்டன. அதே போல் ஊழியர் சேமலாபநிதி, ஊழியர் நம்பிக்கை நிதி போன்றவைதொடர்பான சட்டங்களிலிருந்து உள்நாட்டு வீட்டுவேலைத் தொழிலாளர்கள் ஒதுக்கப்பட்டமை போன்ற விடயங்கள் பற்றியும் அமைச்சருடன் கலந்துரையாடப்பட்டன.
இவை அனைத்தும் பாரிய பிரச்சினை என்பதை தொழில் அமைச்சர் ஏற்றுக் கொண்டதுடன் அதற்குத் தேவையான சட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார். குறிப்பாக ஊழியர் சேமலாப நிதி, மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (ஈ.டி.எப். மற்றும் ஈ.பி.எப்) என்பன தொடர்பான சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளதையும் அமைச்சர் ஏற்றுக் கொண்டதுடன் அதற்கான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தெரிவித்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.