பெரும்பாலான பகுதிகளில் மழை; வடக்கு, கிழக்கில் வெப்பச் சுட்டெண் அதிகரிப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 13ஆம் திகதி திங்கட்கிழமை அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்ற நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஒருசில பிரதேசங்களில் வெப்பநிலையானது மனித உடலுக்கு உணரக்கூடிய தன்மையில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல் வடக்கு மற்றும் தெற்கு கடற்பரப்பில் இன்றைய தினம் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என்பதால் அக்கடற்பரப்பு கொந்தளிப்பாக காணப்படும் ஆகவே கடற்படை மற்றும் மீனவ சமூகம் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மழைவீழ்ச்சி

கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இன்றைய தினம் மழை பெய்யக்கூடும்.அதேபோல் மேல்மாகாணம் மற்றும் வடமேல் மாகாணத்தில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை. திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு (40-50) கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடல் கொந்தளிப்பு

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான மற்றும் சிலாபத்திலிருந்து புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு (50-60) கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன் கொந்தளிப்பாகக் காணப்படும்.

கடற்படையினரும் மீனவ சமூகத்தினரும் இது குறித்து அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் குறித்து அவதானம் செலுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வடக்கு ,கிழக்கு மாகாணத்தில் வெப்பமான காலநிலை நிலவும்

நாட்டில் முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் ஒருசில பிரதேசங்களில் இன்றைய தினம் பகல் பொழுதில் வெப்பச் சுட்டெண் அதாவது மனித உடலுக்கு உணரப்படும் வகையில் கவனம் செலுத்தப்பட வேண்டிய மட்டத்தில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

போதுமான அளவு நீர் அருந்த வேண்டும். பகல் பொழுதில் நிழலான இடத்தில் ஓய்வாக இருத்தல் வேண்டும்.

வயது முதிர்ந்தோர் மற்றும் நோயாளிகள் குறித்து விசேட கவனம் செலுத்தல் வேண்டும்.சிறுவர்களை வாகனங்களில் தனித்து விட வேண்டாம்.உடலில் இருந்து வியர்வை அதிகளவில் வெளியேறும் வகையிலான செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்வது அவசியமானது என வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.