போரைச் சாட்டாக வைத்து பொருட்களை அதிக விலைக்கு விற்கின்றனர் – அசேல சம்பத் குற்றச்சாட்டு

தற்போது எரிவாயு விலையை அரசாங்கம் அதிகரித்திருந்தாலும், நுகர்வோர் பணம் செலுத்துவது எரிவாயுவுக்காக அல்ல, தம்வசம் உள்ள வெற்றுச் சிலிண்டர்களுக்காகவே ஆகும். சந்தையில் எரிவாயு எங்கே இருக்கின்றது? என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அசேல சம்பத் கேள்வி எழுப்பினார்.

தேசிய நுகர்வோர் முன்னணி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

நள்ளிரவு முதல் எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள் உயர்த்தப்படுவது ஏன் என்பதை அறியவே நாம் இந்த ஊடக சந்திப்பை நடத்தினோம். சர்வதேச ரீதியிலான போர்ச் சூழல் எமக்கு இன்னும் நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. நம்மிடம் உள்ள கையிருப்புகளைக் காட்டி அநியாயமான முறையில் விலையை உயர்த்தும்போது, அது நுகர்வோரை நேரடியாகப் பாதிக்கின்றது.

ஏன் இந்த அறிவிப்புகளை நள்ளிரவில் விடுக்க வேண்டும்? பகல் 10 மணிக்கு அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்க முடியாதா? நள்ளிரவில் விலையை உயர்த்துவதால், மறுநாள் காலை சந்தையில் உள்ள மருந்துகள் முதல் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் எகிறுகின்றன. அரசாங்கம் ஒன்றைச் செய்யும்போது, தனியார் துறையினரும் தன்னிச்சையாக விலைகளை உயர்த்தி இலாபம் ஈட்டுகின்றனர்.

இன்று எரிவாயு விலையை 300 ரூபா மற்றும் 120 ரூபா என இரு வேறு விலைகளில் உயர்த்தியுள்ளனர். ஆனால், சந்தையில் எரிவாயு கிடைப்பதில்லை. ஒரு ஹோட்டலில் குறைந்தபட்சம் 10 சிலிண்டர்கள் இருக்கும். லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ என தலா ஐந்து சிலிண்டர்களை வைத்திருப்பார்கள்.

அவர்களின் அன்றாடத் தேவைக்கு 3 அல்லது 4 சிலிண்டர்களே போதுமானது. மீதமுள்ள 7 சிலிண்டர்களும் வெற்றாகவே இருக்கும். சந்தைக்கு விநியோகம் வந்தவுடன், குளத்தில் மீன்களுக்கு உணவு போடுவது போல, இந்த வெற்றுச் சிலிண்டர்களை வைத்திருப்பவர்கள் அனைத்தையும் பதுக்கிக் கொள்கின்றனர். இதனால் சாதாரண குடும்பங்களுக்கு எரிவாயு கிடைப்பதில்லை.

எரிவாயு விநியோகத்தில் நிலவும் இந்த முறைகேடுகளைத் தவிர்க்க உடனடியாக QR குறியீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும். இதன் மூலம் எரிவாயு நிறுவனங்களிடம் நுகர்வோர் தொடர்பான முறையான தரவுத்தளம் இருக்கும்.

புதிதாகத் திருமணமான தம்பதிகள் ஒரு சிலிண்டர் கூட இல்லாமல் தவிக்கும் நிலையில், பலர் சிலிண்டர்களைச் பதுக்கி வைப்பது தடுக்கப்பட வேண்டும். பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் பிள்ளைகளுக்கு உணவு சமைக்கக் கூட இன்று எரிவாயு இல்லை. நுகர்வோர் எரிவாயுவைச் சேமித்து வைக்க முடியாது, அது சிலிண்டரில் இருக்கும் வரை தான் பயன்படுத்த முடியும்.

சந்தைக்கு விடப்படும் ஒரு இலட்சம் சிலிண்டர்கள் 98 சதவீதமாவது உண்மையான நுகர்வோரைச் சென்றடைகிறதா என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லையெனில் இது ஒரு பாரிய சமூக அநீதியாகும். அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்பவர்களின் களஞ்சியங்களைச் சோதனையிட வேண்டும்.

பல மாதங்களுக்கு முன்பே குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு, சீனி போன்ற பொருட்களை இன்று போரைச் சாட்டாக வைத்து அதிக விலைக்கு விற்கின்றனர். இலாபம் ஈட்டுவதற்காக நுகர்வோரை வாட்டும் இந்தச் செயல்களைத் தடுத்து, அத்தியாவசியப் பொருட்களுக்குக் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க வேண்டும்.