மடு திருத்தல ஆவணி மாத திருவிழா தொடர்பில் மன்னார் மறைமாவட்ட ஆயரின் அறிவிப்பு

மன்னார், மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியில் இம்முறை நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொள்ளவுள்ள நிலையில், வருகை தரும் பக்தர்களின் நலனை கருத்திற்கொண்டு சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா தொடர்பாகவும் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயும் 2ஆவது கூட்டம் இன்றைய தினம் (9) காலை 11 மணியளவில் மடு திருத்தல மண்டபத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார், மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஜே.பெப்பி சோசை அடிகளார், சுகாதார திணைக்கள அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், பொலிஸார், இராணுவ உயர் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது எதிர்வரும் ஆவணி மாதம் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள மடு திருவிழா தொடர்பாகவும் முன்னாயத்த நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அங்கு மேற்கண்டவாறு கருத்து தெரிவித்த ஆயர் மேலும் கூறுகையில்,

மன்னார், மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியில் இம்முறை நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, உரிய திணைக்களங்களின் உதவியோடு, மடு திருத்தலத்துக்கு வரும் மக்களின் தேவைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக நீர், சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து போன்ற தேவைகளை உரிய திணைக்களங்களுடன் இணைந்து நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது நவநாள் திருப்பலிகள் இடம்பெற்று வருகின்றது.

 

எதிர்வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமை மாலை வேஸ்பர் ஆராதனையை தொடர்ந்து, 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.

இம்முறை திருவிழா திருப்பலி திருத்தந்தையின் பிரதிநிதி தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

ஏற்கனவே மடு திருத்தலத்தில் உள்ள விடுதிகள் எல்லாம் மக்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், தற்போது 500க்கும் மேற்பட்ட தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு மக்கள் வருகை தந்துள்ளனர்.

மக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கொழும்பில் இருந்து மடு சந்திக்கான விசேட புகையிரத சேவைகளும், மன்னாரில் இருந்து அரச மற்றும் தனியார் போக்குவரத்துச் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.