மருத்துவமனைக்கு செல்லும் சகலரது உயிருக்கும் உத்தரவாதம் வழங்க முடியாது

பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதிக்கு செலுத்தப்பட்ட ஐ.வி வகையான தடுப்பூசி நாடளாவிய ரீதியில் உள்ள சகல அரச வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட 1 இலட்சத்து 45 ஆயிரத்துக்கும் அதிகமான தடுப்பூசிகளில் 79 ஆயிரத்துக்கும் அதிகமாக தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மருத்துவமனைக்கு செல்லும் அனைவரின் உயிரிருக்கும் உத்தரவாதம் வழங்க முடியாது. அதனால் தான் மருத்துவமனையில் பிரேத அறை உருவாக்கப்பட்டுள்ளது. இதுவே யதார்த்தம் என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற அமர்வின் போது இருபத்தேழு இரண்டின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

சுகாதாரத்துறை சேவையை அடிப்படையாக கொண்டு எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் தெளிவுப்படுத்துவது அமைச்சர் என்ற ரீதியில் எனது பொறுப்பாகும். மருந்து தட்டுப்பாடு மற்றும் தரமற்ற மருந்து இறக்குமதி என்று பல்வேறு மாறுப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இவ்விடயம் தொடர்பில் சுகாதாரத்துறை அமைச்சு விசாரணை முன்னெடுத்துள்ளது. அறிக்கை கிடைத்ததும் அதை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பேன்.

பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதியின் மரணத்தை தொடர்ந்து தரமற்ற மருந்து இறக்குமதி செய்யப்பட்டு நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது என்ற நிலைப்பாட்டை தோற்றுவிக்க ஒருதரப்பினர் முயற்சிக்கிறார்கள். இந்த யுவதிக்கு பயன்படுத்திய மருந்து 2013  ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி காலப்பகுதியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு 20 ஆண்டுகாலமாக பயன்பாட்டில் உள்ளது. பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் ஊடாக இந்த மருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் குறுகிய நோக்கங்களுக்காக இலவச சுகாதார சேவையை பலவீனப்படுத்தும் வகையில் போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த அந்த யுவதிக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி அன்றைய தினம் 10 இற்கும் அதிகமானோருக்கு  பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி நாடளாவிய ரீதியில் உள்ள பல வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. பேராதனை வைத்தியசாலைக்கு 24 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 11 ஆயிரத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் உள்ள அரச வைத்தியசாலைகளில் 1 இலட்சத்து 45 ஆயிரத்துக்கும் அதிகமாக  ஐ.வி என்ற இந்த தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளன.அவற்றில் 79 ஆயிரத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.தடுப்பூசி விசமானதால் பேராதனை வைத்தியசாலையில் யுவதி உயிரிழந்ததாக செய்தி வெளியாகுகின்றன.இது முறையற்றதாகும்.

கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகியவுடன் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.ஆகவே சுகாதார சேவை குறித்து வெளியாகும் பொய்யான செய்திகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தியுள்ளோம்.2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் நூற்றுக்கும் அதிகமான  மருந்து வகைகள் பயன்பாட்டுக்கு தடை செய்யப்பட்டுள்ளன.ஒருதரப்பினர் குறிப்பிடும் கருத்துக்களுக்கு மாத்திரம் எதிர்க்கட்சித் தலைவர் கவனம் செலுத்துவது கவலைக்குரியது.

நாட்டில் பாரிய மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக பொய்யான செய்தியை ஒரு தரப்பினர் வெளிப்படுத்தி வருகிறார்கள்.உயிர்காக்கும் 14 வகையான மருந்துகள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்கு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.இல்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள்.பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியிலும் மருந்து கொள்வனவுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளோம்.

தேசிய ஒளடதங்கள் கண்காணிப்பு அதிகார சபையின் ஒருசில முறையற்ற செயற்பாடுகளை தடுத்ததால் இன்று எனக்கு எதிரான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. மருந்து விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற விவாதத்தை நடத்துங்கள் பல விடயங்களை வெளிப்படுத்துகிறேன். மருந்து விஷமானதால் பலர் உயிரிழக்கிறார்கள் என செய்திகள் வெளியாகுகின்றன.பொய்யான செய்திகள் இலவச சுகாதாரத்துக்கு பாரிய அச்சுறுத்தலாக உள்ளது.

குளியாப்பிடிய பகுதியில் 4 மாத குழந்தை உயிரிழப்பு தொடர்பில் பரஸ்பர கருத்துக்கள் குறிப்பிடுகிறது.அந்த குழந்தைக்கு செலுத்திய தடுப்பூசி அன்றைய தினமே 19 குழந்தைகளுக்கும் செலுத்தப்பட்டுள்ளது.துரதிஸ்டவசமாக குழந்தை உயிரிழந்துள்ளது.இந்த விடயம் தொடர்பில் அறிக்கை கோரியுள்ளேன்.

மருந்து விவகாரம் தொடர்பில் தற்போது தோற்றம் பெற்றுள்ள நிலைமை தொடர்பில் ஆராய 7  பேர் அடங்கிய குழு நியமித்துள்ளேன்.வெகுவிரைவில் உண்மை வெளிப்படுத்தப்படும்.மருத்துவமனைக்கு செல்லும் அனைவரின் உயிருக்கு உத்தரவாதம் வழங்க முடியாது.இதனால் தான் மருத்துவமனையில் பிரேத அறை காணப்படுகிறது.இதுவே யதார்த்தம்.

பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் இந்தியா பாரிய ஒத்துழைப்புக்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.மருத்துவ துறைக்கும் நிதியுதவி வழங்கியுள்ளது.கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்துக்கு சென்று தரமற்ற மருந்து  வழங்களுக்காக புரட்சி செய்ய வேண்டும் என வைத்தியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளமை  கவலைக்குரியது.

இந்தியா பல நாடுகளுக்கு மருந்து பொருட்களை விநியோகிக்கிறது. ஆகவே இந்தியாவின் மருந்து விநியோகம் தொடர்பில் பொய்யான கருத்துக்களை குறிப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஆகவே சுகாதார அமைச்சு பதவியை எதிர்பார்த்து ஒருதரப்பினர் செயற்படலாம் அதை வேறு வழியில் பார்த்துக் கொள்ளலாம். குறுகிய நோக்கத்துக்காக நாட்டின் இலவச சுகாதார சேவையை பலவீனப்படுத்தும் செயற்பாட்டை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.