மாகாண சபை தேர்தல் தொடர்பில் இந்தியாவிடம் மனோ விடுத்துள்ள கோரிக்கை

வடக்கு, கிழக்கிலாவது முதலில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நேற்று(04.08.2023) மாலை நடைபெற்றது.

இதன்போதே தாம் மேற்கண்டவாறு வலியுறுத்தியதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில்,”வடக்கு கிழக்கிலாவது முதலில் மாகாண சபைத் தேர்தலை நடத்தச் சொல்லுங்கள். பொலிஸ் அதிகாரத்தை பிரச்சினையாக்கி மாகாண சபையை மறுப்பது நியாயமல்ல.

இந்தியத் தூதரகத்தில் அமைந்துள்ள மலையக கல்வி அறக்கட்டளையை புதுப்பியுங்கள். அதன்மூலம் இந்திய அரசின் 300 கோடி நன்கொடையை மலையகக் கல்வி வளர்ச்சிக்காக பயன்படுத்துங்கள்.

அந்த நிதி யாருக்காக, எதற்காக வழங்கப்பட்டதோ அதற்காகப் பயன்பட வேண்டும் என்று இந்தியத் தூதுவருடனான சந்திப்பின்போது எடுத்துரைத்தோம்.”என தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

குறித்த சந்திப்பின் போது, 13 ஆவது திருத்தச் சட்டம் குறித்து பேசப்பட்டது எனவும், 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த இந்தியா தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது எனவும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.