மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான (ஏப்ரல் முதல் ஜூன் வரை) மின்சாரக் கட்டணத்தை 13.56 சதவீதத்தால் அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் உத்தியோக பூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளது.

இக்காலப்பகுதியில் எதிர்பார்க்கப்படும் 15.8 பில்லியன் ரூபா வருமானப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காகவே இந்த உயர்வு கோரப்பட்டுள்ளது.

மின்சாரச் சட்டத்தின் விதிகளுக்கு அமைய, கடந்த பெப்ரவரி மாதம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த முன்மொழிவு தற்போது ஆணைக்குழுவின் விரிவான ஆய்வில் உள்ளது.

மின்சார சபையின் செலவுப் பட்டியல்

மின்சார சபையின் கணிப்பின்படி, இரண்டாம் காலாண்டுக்கான மொத்தச் செலவு 136.5 பில்லியன் ரூபா ஆகும். எனினும், தற்போதைய கட்டண விகிதங்களின் கீழ் மின் விற்பனை மூலம் எதிர்பார்க்கப்படும் வருமானம் 116.9 பில்லியன் ரூபா மட்டுமே.

இந்தப் பாரிய நிதி இடைவெளியை நிரப்பவே அனைத்து நுகர்வோர் பிரிவினருக்கும் சமமான முறையில் 13.56 சதவீதக் கட்டண உயர்வை நடைமுறைப்படுத்தப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

செலவினங்களின் விவரம் (பில்லியன் ரூபாவில்)

மின் உற்பத்தி: 96.3

மின் விநியோகம்: 26.3

நிதிச் செலவுகள்: 7.9

மின் கடத்துகை: 6.0

 

இக்காலப்பகுதியில் மொத்த மின் தேவை 4,577 GWh என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான மின் உற்பத்திப் பங்களிப்பு பின்வருமாறு எதிர்பார்க்கப்படுகின்றது.

புதுப்பிக்கத்தக்க சக்தி: 30.64 சதவீதம்

நிலக்கரி: 30.19 சதவீதம்

நீர் மின்சாரம்: 26.6 சதவீதம்

எண்ணெய்: 12.57 சதவீதம் மின்சார சபையின் இந்தச் செலவுப் பட்டியலில் உள்ள சில விடயங்கள் குறித்துப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது.

குறிப்பாக, நுரைச்சோலை மின்நிலையத்தின் நிலக்கரி உற்பத்தி குறைப்பு மற்றும் அதிகரித்த திறன் செலவுகள் தொடர்பாக மேலதிக விளக்கங்களை ஆணைக்குழு கோரியுள்ளது.

இந்தக் கட்டண உயர்வு முன்மொழிவு மீதான பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆணைக்குழுவின் ஆய்வுகளுக்குப் பின்னரே இறுதியான தீர்மானம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சமீபத்திய செய்திகள்