முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக அமெரிக்க நீதிமன்றத்தின் உதவியை நாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மாத்தறை நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகாத காரணத்தினால் பசில் ராஜபக்சவிற்கு பிடியானை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சர்வதேச பொலிஸின் (இண்டர்போல்) உதவியைப் பெற்று, அமெரிக்க நீதிமன்றத்தின் ஒத்துழைப்பைக் கோரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கைக்குத் தேவையான சந்தேகநபர் ஒருவர் எந்தவொரு நாட்டில் இருந்தாலும், அவர் அந்நாட்டின் பிரஜையாக இருப்பினும், அவரை நாட்டிற்கு அழைத்து வர அந்த நாட்டின் நீதிமன்ற உதவியைப் பெற வேண்டியது அவசியமாகும் என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பசில் ராஜபக்ச நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும் அதனால் அவரால் விமானப் பயணம் மேற்கொள்ள முடியாது எனவும் அவரது தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்து வருகின்றனர்.
எனினும் அவரை கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் பல சந்தர்ப்பங்களில் அறிவுறுத்தல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





