யாழில் வைத்தியசாலைக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த பெண் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பகுதியில் கணவருடன் மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்று, வீடு திரும்பிக்கொண்டிருந்த குடும்ப பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் நேற்று புதன்கிழமை (29) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 61 வயதான சரோஜினி தேவி அல்பேர்ட் வில்லியம் என்பவரே உயிரிழந்துள்ளார்

குறித்த குடும்பப்பெண் கடந்த சில தினங்களாக சுகவீனமடைந்திருந்த நிலையில் நேற்றைய தினம் கணவனுடன் துவிச்சக்கர வண்டியில் மருத்துவ சிகிச்சைபெற அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

சிகிச்சை பெற்றுக்கொண்டு , கணவனுடன் துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை , பின்னால் வேகமாக வந்த கார் இவர்களை மோதி தள்ளியுள்ளது.

விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த குடும்ப பெண் தூக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த இளவாலை பொலிஸார் காரின் சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.