யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சரும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (27) காலை 09:00 மணியளவில் யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் வரவேற்புரையாற்றுகையில், கடந்த 2025 ஆம் ஆண்டில் மாவட்டத்தின் அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட நிதியினை உச்சளவில் பயன்படுத்தி, மக்களின் தேவைகளை நிறைவேற்ற ஒன்றிணைந்து பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்தார். சவால்கள் இருந்தபோதிலும் ஆக்கபூர்வமான கருத்துகளுடன் மாவட்டத்தின் சமூகப் பொருளாதார வாழ்வியலை மேம்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடியான சூழலிலிருந்து மீள்வதற்கு அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் சர்வதேச ரீதியாகப் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ள போதிலும், யாழ்ப்பாண மாவட்டத்தின் நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அத்தியாவசியச் செயற்பாடுகள் குறித்துக் கலந்துரையாட வேண்டிய தேவையுள்ளதால் இக்கூட்டம் நடத்தப்படுவதாகக் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தின் போது பின்வரும் முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுத் தீர்மானங்கள் எட்டப்பட்டன:
மாவட்டத்தில் இன்னும் விடுவிக்கப்பட வேண்டியுள்ள காணி விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
தற்போதைய எரிபொருள் விநியோக நடைமுறைகள் மற்றும் அதில் உள்ள சிக்கல்கள்.
நகர அபிவிருத்தித் திட்டம், ‘சமூக சக்தி’ நிகழ்ச்சித் திட்டம் மற்றும் ‘தூய இலங்கை’ (Clean Sri Lanka) வேலைத்திட்டங்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதுடன், கடந்த காலத் தீர்மானங்களின் முன்னேற்றங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், வட மாகாணப் பிரதிப் பிரதம செயலாளர், மாவட்டச் செயலக அதிகாரிகள், வட மாகாண கடற்படைத் தளபதி, பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் முப்படைகளின் உயர்மட்ட அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.










