ரணிலை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இணைந்து செயற்பட வேண்டும்

கட்சிக்குள் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் முரண்பட்டுக் கொண்டிருப்பதை விட, எதிர்க்கட்சிகளின் பிரதான எதிரியான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வீழ்த்துவதற்கான வியூகத்தை வகுப்பதே காலத்துக்கு பொறுத்தமானதாகும் எனத் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா விரைவில் மீண்டும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவார் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய மக்கள் சக்திக்குள் இரட்டை நிலைப்பாட்டில் உள்ளவர்கள் தொடர்பில் நான் பல சந்தர்ப்பங்களில் பகிரங்கமாக தெரிவித்திருக்கின்றேன். காலையில் எதிர்க்கட்சி தலைவருடன் இருப்பவர்கள் மாலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேசுகின்றனர்.

எனினும் இவ்வாறானவர்கள் தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் தனக்கு தெரியப்படுத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் வழங்கிய ஆலோசனைக்கமைய நான் கட்சி செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பில் தெளிவுபடுத்தியிருக்கின்றேன்.

எனவே கட்சிக்குள் உள்ள பிரச்சினைகளை இவ்வாறு செயற்குழுவின் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என்று நம்புகின்றோம்.

ஆனால் கட்சிக்குள் ஒருவரோரொடுவர் மோதிக் கொண்டிருக்காமல் பிரதான எதிரியான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிப்பதற்கான வியூகத்தை அனைவரும் இணைந்து வகுக்க வேண்டும்.

சகல எதிர்க்கட்சிகளும் இணைந்து தோற்கடிக்க வேண்டிய நபர் ரணில் விக்கிரமசிங்க ஆவார். எனவே அதற்கு அனைவரும் தயாராக வேண்டும்.

அதனை விடுத்து கட்சிக்குள் முரண்பட்டுக் கொண்டிருந்தால் அது அனைவரையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கும். நான் தனிப்பட்ட ரீதியில் அறிந்து வைத்துள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவுக்கு உடனுக்குடன் கோபம் வருவதைப் போன்று, அக்கோபம் மிக விரைவில் காணாமல் போய்விடும்.

எனவே அவர் விரைவில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. நேர்மையான அதிகாரியான அவர் வேறு எந்த தரப்புடனும் இணைய மாட்டார் என்பதை நான் உறுதியாகக் கூறுகின்றேன் என்றார்.