ரஷ்ய யுத்தக்களத்தில் இலங்கையர்கள் தற்கொலை குண்டுதாரிகளாக மாற்றப்படுவார்கள்

ரஷ்ய யுத்த களத்தில் பாதிக்கப்பட்டுள்ள 600 இலங்கையர்களை  நாட்டுக்கு அழைத்து வர இராஜதந்திர மட்டத்தில் துரித நடவடிக்கைளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் இல்லையேல் இன்னும் 10 நாட்களுக்குள் இலங்கையர்கள் தற்கொலை குண்டுதாரிகளாக மாற்றப்படுவார்கள் என எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ரஷ்யா- உக்ரைன்  யுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில் ஓய்வு பெற்ற இலங்கை இராணுவத்தினர்  ரஷ்ய யுத்தக்களத்துக்கு சென்று பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளார்கள்.

தாம் யுத்தகளத்துக்கு செல்கிறோம் என்பதை அறியாமலே இவர்கள்  அங்கு சென்றுள்ளார்கள்.இவ்விடயம் தொடர்பில் தேசிய மட்டத்தில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு,ஓய்வுப் பெற்ற இரு மேஜர் ஜெனரல்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

தேசிய மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இராஜதந்திர மட்டத்திலும் துரித விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

ரஷ்ய – உக்ரைன் யுத்தத்தை இன்னும் 10 நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டு வருவதற்கு ரஷ்ய இராணுவம் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.

ரஷ்ய யுத்தக்களத்தில் இணைந்துள்ள இலங்கை இராணுவத்தினரை முன்னிலையில் அனுப்புவதற்கும், அவர்களை தற்கொலை தாக்குதல்தாரிகளாக மாற்றுவதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. ஆகவே  இது பாரதூரமானது.இதனை மனிதாபிமான அடிப்படையில்  ஆராய வேண்டும்.

இலங்கையில் இருந்து ரஷ்யாவுக்கு விசேட குழுவினரை அனுப்பி அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இவர்களை நாட்டுக்கு அழைத்து வர வேண்டும்.சுமார் 600 இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆகவே இதனை அலட்சியப்படுத்த வேண்டாம்.துரிதமாக செயற்பட்டு இவர்களை நாட்டுக்கு அழைத்து வருமாறு அரசாங்கத்திடம் தயவுடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.