வட மாகாணத்தில் பேருந்துகள் மீண்டும் கையளிப்பு

இந்திய அரசாங்கத்தினால் கடன் உதவித் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட புதிய பேருந்துகள் கொழும்பில் வைத்து உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதன் பின்னர், மீண்டும் மீள கையளிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (13)  இடம்பெற்றது.

வடக்கு மாகாணங்களின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள இ.போ.ச.வுக்கு சொந்தமான சாலைகளுக்கும் கிராமிய மக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்த இந்திய அரசாங்கத்தினால் கடன் உதவித் திட்டத்தின் மூலம் புதிய பேருந்துகள் வழங்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், வவுனியா – 04, யாழ்ப்பாணம் – 04, கிளிநொச்சி – 04, மன்னார் – 03, முல்லைத்தீவு – 03, பருத்தித்துறை – 03, காரைநகர் – 03 என இ.போ.ச வடக்கு பிராந்தியசாலைகளின் கிராமிய சேவைகளுக்கு என 24 பேருந்துகள் கடந்த வாரம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அவை இதுவரை போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவில்லை.

அவ்வாறு ஏற்கனவே வழங்கப்பட்ட பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தாத நிலையில், இன்றைய தினம் மீண்டும் விழா எடுத்து பேருந்துகளை கையளிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இந்த ஒவ்வொரு பேருந்துக்குமான கட்டணம் நாளொன்றுக்கு 5000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.    அவ்வாறிருக்கையில், ஒரு வாரத்துக்கு மேலாக பயன்பாட்டில் இல்லாத பேருந்துகளின் குத்தகை பணத்தினை எவ்வாறு செலுத்தப் போகின்றார்கள் என்றும் கையளிக்கப்பட்ட பேருந்துகளுக்கு மீண்டும் ஒரு விழா அவசியமா என்பது போன்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுகின்றன.