விமல் வீரவன்ச பதவி வகித்த அமைச்சரவையே நாட்டை வங்குரோத்துக்கு தள்ளியது

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான அமைச்சரவை எடுத்த தீர்மானங்களினால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது. உலக நடப்புக்கு அமைய கோட்டபய ராஜபக்ஷ தீர்மானங்கள் எடுத்த போது இவர்களே அதற்கு தடையாக இருந்து நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளினார்கள் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற அமர்வின் போது  வாய்மூல வினாக்கள் வேளையில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொருளாதார மீட்சிக்கு தேவையான சிறந்த திட்டங்களையும், மறுசீரமைப்புக்களையும் முன்னெடுத்துள்ளோம். பொருளாதார முன்னேற்றத்துக்காக அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்களை விமர்சிக்கும் தரப்பினர் நெருக்கடியான சூழ்நிலையில் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை,மாற்றுத்திட்டங்களை முன்வைக்கவில்லை.விமர்சனங்களை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

விமல் வீரவன்ச அமைச்சராக இருந்த அமைச்சரவை எடுத்த தீர்மானங்களினால் தான் நாடு வங்குரோத்துக்கு சென்றது. அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ உலக நடப்புக்கு ஏற்ப தீர்மானம் எடுக்க முயற்சித்த போது இவர்கள் தான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக்கும் தடையாக இருந்தார்கள். ஆனால் தற்போது மக்கள் மத்தியில் சென்று ஏதும் அறியாதது  போல் கதைக்கிறார்கள்.

பொருளாதார மீட்சிக்கான சிறந்த திட்டங்களை அமுல்படுத்தியுள்ளோம்.பொருளாதார பாதிப்பில் இருந்து நாடு வெகுவிரைவில் முன்னேற்றமடையும். ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் ஊழல் ஒழிப்புக்கான நடவடிக்கைகள் வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுக்கப்படும் என்றார்.