சிறிலங்கா காவல்துறை மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று சனிக்கிழமை (23) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 697 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், 26,524 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், 15 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 257 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 145 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 90 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 95 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 4,832 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.