2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின்படி, 225,748 மாணவர்கள் உயர்தர கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியீடு தொடர்பாக நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விபரத்தை வெளியிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 11,790 பேர் அனைத்துப் பாடங்களிலும் 'A' தரச் சித்திகளைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு விஞ்ஞானப் பாடத்தின் சித்தி வீதம் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் 69.07 சதவீதமாக இருந்த விஞ்ஞான பாட சித்தி வீதம், இம்முறை 70.1 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

கணித பாடத்துக்கான சித்தி வீதமும் இம்முறை அதிகரிப்பைக் காட்டியுள்ளது. கடந்த வருடம் 71.06 சதவீதமாகக் காணப்பட்ட கணித பாட சித்தி வீதம், இம்முறை 72.03 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களில் மாணவர்கள் அடைந்துள்ள தேர்ச்சி நிலை சாதகமான வளர்ச்சியைக் காட்டியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.