இலங்கைக்கு கடத்த முயன்ற 1250 கிலோ பீடி இலைகள் பறிமுதல் : தமிழகத்தில் 6 பேர் கைது!

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 10 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 1250 கிலோ பீடி இலைகளை பறிமுதல் செய்த பொலிஸார், கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை இன்று (09) கைது செய்தனர்.

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம், வேம்பார் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் பீடி இலைகள் கடத்தப்படவிருப்பதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் கடற்கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இன்று அதிகாலை வேம்பார் கலைஞானபுரம் கடற்கரையை நோக்கி வேகமாக வந்த ‘டாட்டா ஏஸ்’ சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், சுமார் 40 பண்டல்களில் 1250 கிலோ பீடி இலைகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த பீடி இலைகள் படகு மூலம் திருட்டுத்தனமாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்தமை தெரியவந்தது. இதையடுத்து பீடி இலைகள் மற்றும் சரக்கு வாகனத்தை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

அத்தோடு தமிழ்நாட்டை சேர்ந்த 23, 38, 41, 38, 20, 40 ஆகிய வயதுகளை உடைய 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.