திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இருக்கும் 234 தொகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களை எடுத்துச் சொல்வதற்காக ’தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரைப் பயணத்தை தலைமை கழகம் அறிவித்துள்ளது. திமுகவின் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை களையெடுப்பதற்காக இந்த பரப்புரை முன்னெடுப்பட்டுள்ளது.
அதேநேரம் மாநில அரசுக்கு நிதி தராமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது. எனினும், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தமிழக அரசை முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக நடத்தி வருகிறார்.
மத்திய அரசு தமிழகத்தின்மீது வெறுப்பை காட்டுகிறது. ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை புனரமைப்பதற்கு ரூ.8 கோடியும், காசி ரயில் நிலையத்தை புனரமைப்பதற்கு ரூ.100 கோடியும் மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. இப்படி தமிழகத்தை மத்திய அரசு திட்டமிட்டு புறக்கணிக்கிறது. தேசத்தை மதவாத நாடாக மாற்றவும் முயற்சிக்கிறது. இத்தகைய அநீதிகளை எதிர்த்தும், எங்கள் சாதனைகள் குறித்ததும் முன்னணி பேச்சாளர்கள் 22 பேர் அனைத்து மாவட்டங்களுக்கும் தொகுதிவாரியாக சென்று மக்களிடையே பிரச்சாரம் செய்ய இருக்கிறார்கள். அந்த பயணம் இன்று (ஞாயிறு) முதல் தொடங்குகிறது.
அண்ணாவின் பெயரை வைத்து கொண்டு அவருடைய கொள்கைக்கு எதிராக செயல்படக்கூடிய மத்திய அரசிடம் அதிமுக அடிமையாக இருக்கிறது. காங்கிரஸ் எப்போதும் எங்களிடம் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை . குறைவான இடத்தை திமுக பெற்றபோது கூட வெளியில் இருந்து எங்களுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தார்கள். இப்போதும் காங்கிரஸ் கட்சி தேசிய மற்றும் தமிழக தலைமைஎங்களிடம் ஆட்சியில் பங்கு குறித்து எதுவும் பேசவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.





