பிரதான கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்’ என கிருஷ்ணகிரி மாவட்ட கிரஷர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார். கல் குவாரிகளில் வெட்டி எடுக்கப்படும் கற்களுக்கு கனமீட்டர் அடிப்படையில் அரசுக்கு பணம் செலுத்திய நிலையில், தற்போது மெட்ரிக் டன் அடிப்படையில் பணம் செலுத்த வேண்டும். புதிதாக கனிம நிலவரி செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட புதிய உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவுகளை திரும்பப்பெறக் கோரி, தமிழகம் முழுவதும் கிரஷர் உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கோனே ரிப்பள்ளியில் தமிழ்நாடு குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் ஓசூர், கிருஷ்ணகிரி கிரஷர் ஓனர்ஸ் பெடரேஷன் சார்பில் தொடர் கவன ஈர்ப்பு போராட்டம் நேற்று 6-வது நாளாக நடைபெற்றது.
இதுதொடர்பாக கிரஷர் உரிமையாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சம்பங்கி கூறியதாவது: எங்களின் 23 கோரிக்கை தொடர்பாக 2 நாட்களுக்கு முன்னர் அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில், மெட்ரிக் டன் அடிப்படையில் பணம் செலுத்தும் முறை, புதிதாக கனிம நிலவரி செலுத்த வேண்டும் என்ற எங்களின் 2 பிரதான கோரிக்கைகளைத் திரும்பப்பெற வேண்டும் என்பதை ஏற்கவில்லை. மற்ற 15 கோரிக்கைகளை ஏற்றனர்.
எங்கள் பிரதான கோரிக்கையை நிறைவேற்றும் வரை வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும். இதனால், தமிழகம் முழுவதும் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான் அரசுக்கு அதிகப்படியான உரிமைத் தொகையைச் செலுத்துகிறோம். எனவே, எங்களது கோரிக்கைகளை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சட்டப்பேரவையில் பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுதொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறும்போது, “கிரஷர் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ஜல்லி மற்றும் எம்-சாண்ட் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், வீடு கட்டும் பணிபாதிக்கப்பட்டுள்ளது. எம்-சாண்ட், ஜல்லி விற்பனை செய்யும் இடைத்தரகர்கள் விலையை இருமடங்கு உயர்த்தி விட்டனர். எனவே, தமிழக அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்” என்றனர்.