தனுஷ்கோடிக்கு கடத்தி வந்த 10 கிலோ தங்கம் பறிமுதல்

இலங்கையில் இருந்து நாட்டுப்படகில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் படகில் சென்று தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த நாட்டுப்படகை மறித்து அதில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் படகில் சோதனையிட்டனர். இதில், படகில் சுமார் 10 கிலோ எடை தங்கம் இருந்தது தெரியவந்தது. தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், படகில் வந்த 4 பேரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்த கடத்தலில் தொடர்புடைய நபர்கள் வேதாளை கிராமத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் அந்த கிராமத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.