தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். வருமான வரி செலுத்தாத குடும்பத்தை சேர்ந்த இல்லத்தரசிகளுக்கு வாஷிங் மெஷின், டிவி, பிரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் அவன், மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் வாங்க ரூ.8 ஆயிரம் மதிப்பில் கூப்பன் வழங்கும் ‘இல்லத்தரசி’ திட்டம் செயல்படுத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, திமுக தேர்தல் அறிக்கையை கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று வெளியிட்டார். அவர் பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகால ‘திராவிட மாடல்’ ஆட்சியில் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி தமிழகத்தை அனைத்து துறையிலும் வளர்த்தோம்.
தொலைநோக்குத் திட்டங்கள் மூலமாக தமிழகம் முழுமையான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் கல்வியை, கட்டமைப்பை, சமூகநீதியை, இதுவரை நாம் அடைந்த முன்னேற்றத்தை பாதுகாக்க வேண்டுமானால் திமுக ஆட்சி தொடர வேண்டும். திராவிட மாடல் 2.0 அமைய வேண்டும்.
அதற்கு அடித்தளமாக, உங்களின் கனவுகளை நிறைவேற்ற ‘ஸ்டாலின் ஸ்டேட்மென்ட்டை (Stalin Statement)’ வழங்கியிருக்கிறேன். அதன் விரிவாக்கம்தான் திமுகவின் தேர்தல் அறிக்கை. வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள், ரூ.8 ஆயிரம் மதிப்பிலான கூப்பனை பயன்படுத்தி வாஷிங் மெஷின், டிவி. பிரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் அவன், மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை புதிதாக வாங்கிக்கொள்ள அல்லது ஏற்கெனவே பயன்படுத்தி வரும் பழைய பொருட்களுக்கு மாற்றாக பெற்றுக்கொள்ள ‘இல்லத்தரசி’ திட்டம் செயல்படுத்தப்படும்.
முதல்வரின் காலை உணவு திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். 1.31 கோடி சகோதரிகள் பெற்று வரும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். இலவச மின்சாரம் பெறும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நவீன மின் பம்ப்செட் வழங்கப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும். முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்படுவதற்கான வருமான வரம்பு ரூ.5 லட்சமாகவும், காப்பீட்டுத்தொகை ரூ.10 லட்சமாகவும் உயர்த்தப்படும். நெல் கொள்முதல் விலை குவின்டாலுக்கு ரூ.3500, கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.4,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தி வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை ரூ.1,200-ல் இருந்து ரூ.2 ஆயிரமாகவும், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1,500-ல் இருந்து ரூ.2,500 ஆகவும் உயர்த்தப்படும்.
மீன்பிடி தடைக்கால சிறப்பு நிவாரணத் தொகை ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரமாகவும், மீன்பிடி குறைவு கால சிறப்பு நிவாரணத்தொகை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.9 ஆயிரமாகவும் உயர்த்தப்படும். சுயஉதவிக் குழு உறுப்பினராக இருக்கும் பெண்களை, தொழில் முனைவோராக முன்னேற்ற பிணையின்றி ரூ.5 லட்சம் வரை மானியத்துடன் கடன் வழங்கப்படும்.


