நடிகை ஸ்ரீதேவி வாங்கிய சொத்து தொடர்பாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு, இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த 1988-ம் ஆண்டு, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 4.77 ஏக்கர் நிலத்தை, சம்பந்த முதலியார் என்பவரின் குடும்பத்தினரிடமிருந்து விலைக்கு வாங்கியுள்ளார்.
அந்த சொத்தை பல ஆண்டுகளாக அனுபவித்து வந்த நிலையில் சம்பந்த முதலியாரின் மகன் சந்திரசேகரனின் இரண்டாவது மனைவி, அவரது மகன் நடராஜன், மகள் சிவகாமி என 3 பேர் வாரிசு சான்றிதழ் அடிப்படையில் தங்களுக்கும் அந்த சொத்தில் பங்கு உள்ளது எனக் கூறி செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கை நிராகரிக்கக்கோரி, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் மற்றும் அவரது மகள்களான நடிகைகள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த செங்கல்பட்டு நீதிமன்றம், முழுமையான விசாரணைக்குப் பிறகே அந்த சொத்தின் உரிமை குறித்து முடிவெடுக்க முடியும் எனக்கூறி, போனி கபூரின் மனுவை தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து, போனி கபூர், ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதில், தங்களது சொத்துக்கு மறைந்த சம்பந்த முதலியாரின் மகன் சந்திரசேகரனின் வாரிசுகள் எனக்கூறிக் கொண்டு 3 பேர் போலியான ஆவணங்களை தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அதை செங்கல்பட்டு நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை எனக் கூறியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.வி.தமிழ்செல்வி இந்த வழக்கை இறுதி விசாரணைக்காக வரும் 26-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். அதுவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.




