‘மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000; இல்லத்தரசிகளுக்கு ரூ.8000 கூப்பன்’ – திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயரும், புதுமைப்பெண் திட்டத்தின் உதவித்தொகை ரூ.1500 ஆக உயரும், முதியோர் உதவித்தொகை ரூ.2 ஆயிரமாக உயரும் என்பன உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை திமுகவின் தேர்தல் அறிக்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட மகளிர் உரிமைத் தொகை, அரசு ஊழியர் ஓய்வூதிய திட்டம் உள்ளிட்டவற்றை பட்டியலிட்டார்.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள்:

• 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு இதுவரை காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அது 15 லட்சம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் 8ஆம் வகுப்பு வரை விரிவுப்படுத்தப்படும்.

• மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும்

• இலவச மின்சாரம் பெறும் 20 லட்சம் விவசாயிகளுக்கு மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்புசெட்டுகள் வழங்கப்படும்.

• 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்

• முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்படும் வருமான வரம்பு ரூ 5 லட்சமாகவும், காப்பீடுத் தொகை ரூ.10 லட்சமாகவும் உயரும்.

• புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் மாணவ, மாணவிகள் பெறும் உதவித்தொகை ரூ. 1500 ஆக உயர்த்தப்படும்.

• நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆக உயர்த்தப்படும்.

• கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ. 4,500 ஆக உயர்த்தப்படும்.

• பால் கொள்முதல் லிட்டர் ரூ.5 உயர்த்தப்படும்.

• முதியோர் உதவித் தொகை ரூ.1,200 லிருந்து, ரூ. 2 ஆயிரமாக உயர்த்தப்படும்.

• மாற்றுத்திறனாளி உதவித்தொகை ரூ. 1500லிருந்து ரூ.2500 ஆக உயர்த்தப்படும்.

• மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்படும்.

• செம்மொழி மாநாடு சென்னையில் நடத்தப்படும்.

• சுய உதவிக்குழு பெண்களுக்கு மானியத்துடன் ரூ.5 லட்சம் கடன் உதவி வழங்கப்படும்.

• பேரிடர் கால நிவாரணம் நெல்லுக்கு ஹெக்டேருக்கு ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும்

• மாவட்ட மற்றும் வட்ட மருத்துவமனைகளில் டயாலிசிஸ் கருவிகள் இருமடங்காக்கப்படும்.

• அரசு ஊழியர் ஓய்வூதியத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும்.

• மத்திய அரசின் 8வது உதியக்குழு நடைமுறைக்கு வந்தபின்னர், மாநிலத்திலும் உடனடியாக செயல்படுத்தப்படும்.

• அரசுத்துறைகளில் உள்ள 1.50 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

• அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு உரிய நேரத்தில் வழங்கப்படும்.

• கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்கப்படும்.