மதுக்கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஏப்ரல் 21, 22, 23-ம் தேதிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ம் தேதி ஆகிய நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறுகிறது. இந்தச் சூழலில், தேர்தலையொட்டி 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23 மற்றும் அதற்கு முதல் இரு நாட்கள் ஏப்ரல் 21 மற்றும் 22 தேதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் மட்டுமின்றி தனியார் பார்கள், நட்சத்திர விடுதிகளிலும் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நான்கு நாட்களிலும் விற்பனை மட்டுமின்றி, மதுபான தயாரிப்பு, மதுபானங்களை வாகனங்களில் கொண்டு செல்லுதல் என அனைத்து வகையான நடவடிக்கைகளுக்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.