மெரினா கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த கார் தீப்பற்றி எரிந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் மென்பொறியாளராகப் பணிபுரிந்து வரும் ஸ்ரீநாத் என்பவர், நேற்று அதிகாலை சூரிய உதயத்தைக் காண்பதற்காகத் தனது காரில் மெரினா கடற்கரைக்கு வந்தார்.
மெரினா சர்வீஸ் சாலையில் காரை நிறுத்திவிட்டு கடற்கரைக்குச் சென்றார். சிறிது நேரம் கழித்து அவர் மீண்டும் காரை நோக்கி வந்தபோது, எதிர்பாராத விதமாக கார் திடீரெனத் தீப்பற்றி எரியத் தொடங்கியது.
தகவலின் பேரில், திருவல்லிக்கேணி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தீயை அணைத்தனர். எனினும், இந்த விபத்தில் கார் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக மாறியது.
அதிர்ஷ்டவசமாக கார் நிறுத்தப்பட்டிருந்த போது தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. காரில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




